வி.சி.க மீது புகார்

தமிழக பா.ஜ.க. துணை தலைவரும், செய்தி தொடர்பாளருமான நாராயணன் திருப்பதி, சென்னை காவல்துறை ஆணையருக்கு ஆன்லைன் மூலம் புகார் மனு ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். அதில் அவர், “ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலம், வரும் நவம்பர் 6ம் தேதி தமிழகம் முழுவதும் நடைபெற உள்ளது. இந்த அணிவகுப்பு ஊர்வலத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. இந்த சூழ்நிலையில் அதே நாளில் 1 லட்சம் மனுஸ்மிருதி புத்தகங்களை தனது கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் வழங்கப்போவதாக, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதனால் இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இது தொடர்பாக, தொல். திருமாவளவன் மீதும், அவரது கட்சியினர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்” என தெரிவித்துள்ளார். மேலும் தனது டுவிட்டர் பக்கத்தில், இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு தகுந்த அறிவுரை வழங்குமாறு, முதல்வர் ஸ்டாலினையும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.