சோனியா பி.ஏ மீது வழக்கு

பட்டியலின சமூகத்தை சேர்ந்த பெண் ஒருவரை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக டெல்லி காவல்துறையினர் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தனிச்செயலாளர் பி.பி மாவன் மீது வழக்கு பதிந்துள்ளனர். எனினும் இதுதொடர்பாக அவரை இன்னும் கைதுசெய்யப்படவில்லை. பாதிக்கப்பட்டதாக கூறப்படும் பெண்ணின் கணவர் காங்கிரஸ் அலுவலகத்தில் வேலை பார்த்து வந்தார். 2020ம் ஆண்டு அவர் இறந்ததால் தனக்கு வேலை எதாவது ஏற்பாடு செய்துத்தர உதவி கோரி மாதவனை சந்தித்துள்ளார். அவரும் வாங்கித்தருவதாக வாக்களித்து 21 ஜனவரி 2022 ஒரு நேர்காணலுக்கு அழைத்துள்ளார். அங்கு பலகேள்விகளை கேட்டபிறகு ‘எனது மனைவியை விவாகரத்து செய்துவிட்டேன் உன்னை திருமணம் செய்ய விரும்புகிறேன்’ என கூறியுள்ளார் மாதவன். ஒருநாள் காருக்குள் வைத்து அந்த பெண்ணை கற்பழிக்க முயற்சிக்கையில் அந்த பெண் மாதவனை தள்ளிவிட்டுள்ளார். இதனால் அந்த பெண்ணை நடுரோட்டில் இறக்கிவிட்டு சென்றார் மாதவன். சிலநாட்கள் கழித்து அந்த பெண்ணிடம் மன்னிப்பு கேட்டு சகஜமாக பேசியவர் மீண்டும் பிப்ரவரி மாதம் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் அடிக்கடி மிரட்டி கற்பழித்தது மட்டுமல்லாமல் கொலை மிரட்டலும் விடுத்துள்ளார் என அந்த பெண் புகார் தெரிவித்திருப்பதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர். இதுகுறித்து துவாரகா டி.ஜி.பி ஹர்ஷ்வர்தன் செய்தியாளர்களிடம் பேசுகையில் “கடந்த ஜூன் 25 அன்று பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் அவர் மீது பாலியல் பலாத்காரம் மற்றும் மிரட்டல் ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது” என தெரிவித்துள்ளார். தனியார் செய்தி நிறுவனத்திடம் பேசிய பி.பிமாதவன், “காங்கிரஸ் கட்சியின் மீது அவதூறுகளை பரப்பவே இந்த வழக்கு ஜோடிக்கப்பட்டுள்ளது. ஆதாரமில்லாத குற்றசாட்டு, இதில் உண்மை எதுவும் இல்லை. இது ஒரு திட்டமிட்ட சதி” என கூறியுள்ளார்.