பா.ஜ.க 140 தொகுதிகளில் வெல்லும்

கர்நாடக மாநிலத்தில் வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலுக்கு பா.ஜ.கவின் தேர்தல் இணை பொறுப்பாளராக தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் கர்நாடகா சென்றுள்ள அண்ணாமலை, கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் சிறப்பு பூஜை செய்து வழிபட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘‘கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான இணை பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதால் இனி அடிக்கடி இங்கு வருவேன். 40 நாட்கள் கர்நாடகத்தில் பிரச்சாரம் மேற்கொள்வேன். குறிப்பாக தமிழர்கள் அதிகமாக வசிக்கும் பெங்களூரு, கோலார் தங்கவயல் உள்ளிட்ட இடங்களுக்குச் சென்று வாக்கு சேகரிப்பேன். மத்தியிலும், மாநிலத்திலும் பா.ஜ.க அரசு செயல்படுத்தியுள்ள நலத்திட்டங்களை எடுத்துக்கூறி பிரச்சாரம் செய்வேன். பா.ஜ.க ஆட்சிக்கு மக்களிடம் நல்ல பெயர் இருப்பதால், மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 140 தொகுதிகளில் பா.ஜ.க வெற்றிப் பெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்கும்’’ என கூறியுள்ளார்.