முதல்வருக்கு பாலகுருசாமி பாராட்டு

அண்ணா பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘திறன் சார்ந்த கல்வியும், பயிற்சியும் பாட திட்டத்தில் கட்டாயமாக்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். இது, மாணவர்கள் தொழில் சார்ந்த படிப்புகளை மேற்கொள்ள உதவும். இது கல்வியாளர்களை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளன. ‘இல்லம் தேடி கல்வி, நான் முதல்வன்’ போன்ற திட்டங்கள், இளம் மாணவர்கள் கல்வியில் முன்னேற வழி வகுக்கும். இத்திட்டங்கள் எல்லாம் மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையின் முக்கிய அம்சங்கள். புதிய கல்வி கொள்கையை எதிர்த்தாலும், மறைமுகமாக அவற்றில் உள்ள முக்கிய பரிந்துரைகளை தமிழக அரசு அமல்படுத்தி வருகிறது. தமிழகத்துக்கு என்று மாநில கல்விக் கொள்கை வகுப்பது நல்ல முடிவுதான். ஆனால், அது தேசிய கொள்கையை சார்ந்திருக்க வேண்டும். தேசிய கல்வி கொள்கை, விரிவான சிறந்த உள்ளடக்கங்களைக் கொண்டது. பாரத மாணவர்கள் 21ம் நுாற்றாண்டின் சவால்களை எதிர்கொள்ளும் வகையில் இக்கொள்கை வடிவமைக்கப்பட்டு உள்ளது. இதைவிட ஒரு சிறந்த கொள்கையை, இன்னொரு கமிட்டி திட்டமிடுமா என்பது சந்தேகமே. மத்திய அரசின் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கௌன்சில், பல்கலை மானியக்குழு, தேசிய மருத்துவ கமிஷன் ஆகியவற்றின் விதிகளின்படி, புதிய கல்விக் கொள்கையை, மத்திய மாநில பல்கலைக் கழகங்கள் அமல்படுத்த வேண்டியது கட்டாயம். இதுகுறித்து, அனைத்து பல்கலைக் கழகங்களுக்கும் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. இக்கொள்கையை முழுமையாக நாம் பின்பற்றாவிட்டால் நம் மாணவர்கள் தேசிய கல்வி திட்டங்களில் இருந்து விலகி நிற்க நேரிடும். தேசிய அளவில் வேலைவாய்ப்பு, கல்வி அங்கீகாரம் பெறுவதில் சிக்கல் ஏற்படும். எனவே, புதிய கல்வி கொள்கையை முழுமையாக அமல்படுத்த வேண்டும்’ என கூறியுள்ளார்.