ஆர்.எஸ்.எஸ் சார்பில் மேல்முறையீடு

ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சார்பில் நடத்தப்படும் அணிவகுப்பு ஊர்வலத்தை உள்ளரங்கு மைதானத்தில் நடத்த வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

தமிழகம் முழுவதும் 50 இடங்களில் ஆர்எஸ்எஸ் சார்பில் கடந்த அக்டோபர் 2ம் தேதி அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதி கோரப்பட்டது. ஆனால் காவல்துறை அனுமதி மறுத்த நிலையில் உயர் நீதிமன்றத்தில் 50 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, 50 இடங்களிலும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு அணிவகுப்பு ஊர்வலத்தை நடத்திக்கொள்ள செப்டம்பர் மாதம் உத்தரவிட்டார். இதற்கிடையே பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா அமைப்பு தடை செய்யப்பட்டதால் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு பிரச்சனையை காரணம் காட்டி, கடலூர், கள்ளக்குறிச்சி மற்றும் பெரம்பலூர் ஆகிய 3 இடங்களைத் தவிர்த்து மற்ற இடங்களில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்துக்கு காவல்துறை அனுமதி மறுத்தது. இதையடுத்து காவல்துறை மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

இந்த அவமதிப்பு வழக்கை விசாரித்த நீதிபதி, கோவை, பொள்ளாச்சி உள்ளிட்ட 6 இடங்களில் நிலைமை சீரான பிறகு அணிவகுப்பை நடத்திக் கொள்ளலாம், எஞ்சிய 41 இடங்களில் உள்ளரங்கு விளையாட்டு அரங்கம் அல்லது சுற்றுச்சுவருடன் கூடிய விளையாட்டு மைதானத்தில் அணிவகுப்பு ஊர்வலத்தை நடத்த வேண்டும் என கடந்த 4ம் தேதி உத்தரவிட்டார். இதையடுத்து, அனுமதிக்கப்பட்ட கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூரைத் தவிர ஏனைய இடங்களில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில், தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த ஆர்.எஸ்.எஸ் நிர்வாகி ஜி. சுப்பிரமணியன் சார்பில் வழக்கறிஞர் ரபுமனோகர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார். அதில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நீதிமன்றம் ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவை மாற்றியமைக்க முடியாது. அதற்கு உயர் நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை. ஜம்மு காஷ்மீர் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த அக்டோபர் 2ம் தேதி ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் அமைதியான முறையில் நடந்துள்ளது.

ஆனால், தமிழகத்தில் மட்டும் அனுமதி மறுக்கப்படுவது சட்ட விரோதம். ஆனால் இதே காலகட்டத்தில் பிற அரசியல் கட்சியினர் போராட்டம், பேரணி நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதை தனி நீதிபதி கவனிக்க தவறிவிட்டார். எனவே உள்ளரங்கு விளையாட்டு அரங்கம் மற்றும் விளையாட்டு மைதானங்களில் மட்டுமே இந்த அணிவகுப்பு பேரணியை நடத்த வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து, அமைதியான முறையில் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு ஊர்வலத்தை நடத்த அனுமதி வழங்க வேண்டும்” என கோரியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.