திருவாரூரில் நடைபெற இருந்த சனாதன எதிர்ப்பு கருத்தரங்கம் ரத்து

அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு, திருவாரூர் கலைஞர் கோட்டத்தில் மாவட்ட திமுக சார்பில் செப்.15-ம் தேதி (நேற்று) சனாதன எதிர்ப்புக் கருத்தரங்கம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையில், இந்தக் கருத்தரங்கில் திருவாரூர் திருவிக அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் பங்கேற்று, சனாதனத்துக்கு எதிரான தங்களது கருத்துகளைப் பதிவு செய்யலாம் என கல்லூரி முதல்வர் (பொ) ராஜாராமன் சுற்றறிக்கை அனுப்பி இருந்தார். திமுகவுக்கு ஆதரவாக கல்லூரி முதல்வர் செயல்படுவதாக பாஜக உள்ளிட்ட கட்சிகள் குற்றம்சாட்டின. இதையடுத்து, சனாதனம் குறித்த கருத்தரங்கில் பங்கேற்று மாணவர்கள் தங்களது கருத்துகளைத் தெரிவிக்கலாம் என இரண்டாவது சுற்றறிக்கையை கல்லூரி முதல்வர் அனுப்பினார். இந்த சுற்றறிக்கை பேசு பொருளானதைத் தொடர்ந்து, இரு சுற்றறிக்கைகளும் திரும்பப் பெறப்படுவதாக கல்லூரி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், கலைஞர் கோட்டத்தில் நேற்று நடைபெறவிருந்த சனாதன எதிர்ப்புக் கருத்தரங்கம் ரத்து செய்யப்பட்டது