கிராம வளர்ச்சி சமூகத்தின் செயல்பாடு

ராஜஸ்தான் மாநிலம் துர்காபூர் மாவட்டத்தில் உள்ள பீமாய் பகுதியில் நடைபெற்ற ‘பிரபாத் கிராம விகாஸ் மிலன்’ நிகழ்ச்சியின் நிறைவு அமர்வில், ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்) தலைவர் டாக்டர் மோகன் பாகவத் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “கிராம மேம்பாடு என்பது சமுதாயத்தின் செயல்பாடு. ஒவ்வொரு நொடியும் முழு சமுதாயத்தையும் நம்முடையதாக கருத வேண்டும். அத்தகைய நடத்தை மூலம், சமூகத்தின் நடத்தையை மாற்றியமைத்து, ஒரு நிலையான ஒழுங்கமைக்கப்பட்ட சமூகத்தை உருவாக்க வேண்டும். சமூகம் சார்ந்த வளர்ச்சியே நமது நாட்டின் இயல்பு. கடந்த காலங்களில் பாரதம் முன்னணி நாடாக இருந்தபோது, அனைத்து விதமான வளர்ச்சிகளையும் அது அடைந்துவந்தாலும், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பாக வைத்திருக்க நாம் உழைத்தோம். உலக அளவில் பொருளாதாரத்தில் முதலிடத்தில் இருந்தோம் நாம். அரசிடம் இருந்து உதவியை எதிர்பார்க்காமல், சுய சார்புடன் இருக்க சமுதாயத்தை நாம் தட்டியெழுப்ப வேண்டும். கிராம வளர்ச்சியை நாமே செய்ய வேண்டும். நம்முடன் இணைந்து செயல்படும் மக்கள் குழுவை உருவாக்கி, கூட்டு முடிவின் மூலம் கிராமத்தை மேம்படுத்த வேண்டும். வளர்ச்சிக்கான கூட்டுச் சிந்தனையே முழு நிரூபணமாக இருக்கும். எனவே அதற்கு கூட்டாக முடிவெடுக்க வேண்டும். இத்தகைய வளர்ச்சி நடவடிக்கைகளின் விளைவு படிப்படியாகவே தெரிய வரும். எனவே, பொறுமையுடன் தொலைநோக்கு பார்வையுடன் நாம் செயல்பட வேண்டும். அப்போதுதான் திறமை வளரும்” என்றார்.

பின்னர், சுவாமி விவேகானந்தர் கிராம விகாஸ் சமிதி ஏற்பாடு செய்திருந்த கிராம சபையில் உரையாற்றிய ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத், “கிராம வளர்ச்சியின் பணி முதலில் கிராம மக்களின் சிந்தனையில் தொடங்குகிறது. பிரபாத் கிராமம், எந்த பாகுபாடும் இல்லாமல் அனைவரும் தன்னலமின்றி உழைக்கும் ஒன்றாகும். பீமாய் உட்பட நமது நாட்டில் 300க்கும் மேற்பட்ட பிரபாத் கிராமங்கள் உள்ளன” என தெரிவித்தார். கல்பவிருட்சத்தின் கதையைச் சொல்லிய அவர், “நாம் நினைப்பது போல் எல்லாம் நடக்கலாம். ஒரு மனிதன் மன உறுதியுடன் இருந்தால், அவரால் மண்ணிலிருந்து அமிர்தத்தைப் பிரித்தெடுக்க முடியும்” என்றார். தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையே சொர்க்கத்திற்கு ஏணி போடும் கதையை கூறிய அவர், பிறருக்கு தீங்கு செய்யாமல், சுயநலத்தை விடுத்து, வேற்றுமைகளை களைந்து உழைக்க வேண்டும். ஒரு நபர், நல்லொழுக்கத்துடன், தனது குடும்பம், கிராமம், மாவட்டம் மற்றும் நாட்டிற்கு பயனுள்ளவராக இருக்க வேண்டும், மேலும் ஒருவரின் வட்டம் முழு உலகுக்கும் நீட்டிக்கப்பட வேண்டும். நமது பீமாய் கிராமம், இப்போது பிரபாத் கிராமமாக உள்ளது. அதன் விளைவு அருகிலுள்ள கிராமங்களைச் சென்றடைய வேண்டும். நகரம் போன்ற வசதிகள் கிராமங்களிலும் இருக்க வேண்டும். கிராமங்களில் பரஸ்பர உறவின் அடிப்படையில் பணிகள் நடைபெற வேண்டும். இங்கு வாழும் மக்கள் முழு கிராமத்தையும் ஒரே குடும்பமாக நடத்த வேண்டும்” என கூறினார்.

கூட்டத்தின் தொடக்கத்தில், “ஸ்ரீ மா மகிளா கிராம விகாஸ் சமிதி” தலைமையில், அனைத்து பெண்களும் “ஹோனா ரூபா நி தாரி ஹபடோன் ஆஜே பகவத் ஜி பதராய” என்ற நாட்டுப்புறப் பாடலுடன் அவரை வரவேற்றனர். பின்னர், டாக்டர் மோகன் பாகவத்துக்கு ரமேஷ் பாய் மற்றும் அர்ஜுன் பார்கி ஆகியோர் தலைப்பாகை அணிவித்து மரியாதை செலுத்தினர். கிராம சபையின் அறிக்கையை விவேகானந்தா கிராம விகாஸ் சமிதியின் செயலாளர் கிரிஷ் பாய் வாசித்தார். கூட்டத்தின் முடிவில் மகேந்திர பாய் நன்றி கூறினார். மனோஜ்குமார் கூட்டத்தை வழி நடத்தினார்.