பிரதான ஊடகத்திற்கான அச்சுறுத்தல்

ஒளிபரப்பு மேம்பாட்டுக்கான ஆசிய பசிபிக் நிறுவனத்தின் 47வது வருடாந்திர கூட்டம் மற்றும் 20வது கூட்டத்தை மத்திய இணையமைச்சர் டாக்டர் எல். முருகன், செயலாளர் அபூர்வ சந்திரா உள்ளிட்டோர் முன்னிலையில் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய தாக்கூர், “பிரதான ஊடகத்திற்கு புதுயுக டிஜிட்டல் தளங்கள் அச்சுறுத்தலாக செயல்படவில்லை. மாறாக பிரதான ஊடகமே பிரதான ஊடகத்திற்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக விளங்குகிறது. உண்மைகளை எதிர்கொள்வது, நடக்கும் செயல்களை தெரிவிப்பது மற்றும் சம்பந்தப்பட்ட அனைவரின் கருத்துக்களையும் எடுத்துரைப்பது தான் பத்திரிக்கை தர்மம். முரண்பாடான கருத்துக்கள் கொண்ட, தவறான செய்திகளை பரப்பும் மற்றும் கூச்சல் போடும் விருந்தினர்களை அழைப்பது, ஒரு தொலைக்காட்சியின் நம்பகத்தன்மையைக் கெடுக்கிறது. விருந்தினர், தொனி மற்றும் ஒளி அமைப்புகள் தொடர்பான உங்கள் முடிவுகள், பார்வையாளர்களின் கண்ணோட்டத்தில் உங்களது நம்பகத்தன்மையை வரையறுக்கிறது. பார்வையாளர்கள் உங்கள் நிகழ்ச்சியை ஒரு நிமிடம் பார்க்கக்கூடும், ஆனால் உங்கள் அறிவிப்பாளரையும், உங்கள் தொலைக்காட்சியையும், பிராண்டையும் நம்பகமான மற்றும் வெளிப்படையான செய்தி ஆதாரமாக ஒருபோதும் நம்ப மாட்டார்கள். ஒளிபரப்பு ஊடகம் பத்திரிக்கை துறையின் பிரதான ஊடகமாக இருந்த போதும், கொரோனா காலம் அதன் அமைப்பிற்கு மறுவடிவம் அளித்துள்ளது. சரியான மற்றும் உரிய நேரத்தில் அளிக்கப்படும் தகவல்கள், லட்சக்கணக்கான உயிர்களை எவ்வாறு பாதுகாக்கும் என்பதை பெருந்தொற்று உணர்த்தியுள்ளது” என கூறினார்.