கிடங்காக பயன்படுத்தப்படும் கோயில்

பாகிஸ்தானில் சிறுபான்மையினருக்கு எதிரான மற்றொரு அவமானப்படுத்தும் செயலாக, பெஷாவரில் ஒரு காலத்தில் செழிப்பாக இருந்த ஹிந்து புனித யாத்திரை தலமான பஞ்ச் தீரத், தற்போது பொழுதுபோக்கு பூங்காவில் கிடங்காக பயன்படுத்தப்பட்டு வருவதாக பிட்டர் வின்டர் பத்திரிகை தெரிவித்துள்ளது. பஞ்ச தீரத் என்பது அந்த இடத்தில் இருக்கும் ஐந்து நீர்க் குளங்களைக் குறிக்கிறது. இது மகாபாரத இதிகாசத்தில் வரும் பாண்டு மன்னனின் ஐந்து புதல்வர்களான தருமர், பீமன், அர்ஜுனன், நகுலன், சகாதேவன் ஆகியோருடன் தொடர்புடையதாக ஹிந்துக்கள் நம்புகிறார்கள். இந்த இடம் சுமார் 1,000 ஆண்டுகளாக ஹிந்துக்களின் புனித யாத்திரை மையமாக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. இருப்பினும், தேசப் பிரிவினைக்குப் பிறகு, தற்போது அங்கு இரண்டு கோயில்கள் மட்டுமே எஞ்சியுள்ளன. அவையும் பாழடைந்த நிலையில் உள்ளன. மேலும் அக்கோயில் அமைந்துள்ள பகுதி, சாக்கா யூனாஸ் குடும்பத்தினர் நிர்வகிக்கும் பூங்காவுக்கு உள்ளூர் நிர்வாகத்தால்  குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. 2019ம் ஆண்டில், கைபர் பக்துன்க்வா மாகாண அரசு, பஞ்ச் தீரத்தை தேசிய பாரம்பரிய தளமாக அறிவித்தது. இருப்பினும் அது இன்றுவரை வெறும் அறிவிப்பாகவே உள்ளது. பிட்டர் விண்டர் பத்திரிகை கூற்றுப்படி, கோயில்களை கிடங்குகளாகப் பயன்படுத்தி வரும் அந்த கேளிக்கை பூங்கா நிர்வாகம், மாகாண அரசுக்கு அது அமைந்துள்ள 0.125 ஏக்கர் பகுதியை திரும்பக் கொடுக்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தது. அதே நேரத்தில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் அப்பகுதி 0.625 ஏக்கர் பரப்பளவிலான பகுதி என உறுதியாக தெரிவிக்கின்றனர். மேலும், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் அந்த இடத்தை அணுக முயன்றபோது, ஆயுதம் ஏந்திய நபர்களால் அவர்கள் மிரட்டப்பட்டனர். உயர் நீதிமன்றம், மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக பிரச்சினை தீர்க்கப்படவில்லை என்று அதிருப்தியை வெளிப்படுத்தியது. மேலும் உள்ளூர் அதிகாரிகளிடையே ஊழல் சந்தேக நபர்கள் உள்ளதையும் சுட்டிக்காட்டியது.