பெண்களுக்கு கைதட்டி வாழ்த்து தெரிவித்த தேர்தல் கமிஷனர்கள்

நாளை (ஜூன் 04) ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், டில்லியில் தலைமை தேர்தல் கமிஷனர் ராஜிவ் குமார் மற்றும் தேர்தல் கமிஷனர்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது ராஜிவ் குமார் கூறியதாவது: 7 கட்டங்களாக நடைபெற்ற தேர்தலில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். ஓட்டுப்பதிவில் 64.20 கோடி வாக்காளர்கள் பங்கேற்றுள்ளனர். இதில் பெண் வாக்காளர் 31.20 கோடி பேர். அதிக பெண்கள் ஓட்டளித்து உலக சாதனை படைத்துள்ளனர்.

தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும் நடந்துள்ளது. ஜி7 நாடுகளின் ஓட்டுமொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை விட, இந்தியாவில் ஓட்டளித்தவர்கள் எண்ணிக்கை 1.75 மடங்கு அதிகம். 85 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் அதிக அளவில் ஓட்டளித்துள்ளனர்.
ஓட்டு எண்ணிக்கைக்கு 10 அம்ச ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஓட்டுப்பதிவு துவங்கிய நேரத்தையும் முடிந்த நேரத்தையும் கட்டுப்பாட்டு இயந்திரத்தில் சரிபார்க்கும்படி அறிவுறுத்தியுள்ளோம். ஓட்டு எண்ணிக்கையின் போது கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கி உள்ளோம். ஒவ்வொரு ஓட்டு இயந்திரத்தையும் தனி அடையாள எண் மற்றும் சீல்களை சரிபார்க்கும்படி அறிவுறுத்தியுள்ளோம்.

ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் இடத்தில் சிசிடிவி கேமராக்கள் உள்ளது. ஒவ்வொரு வேட்பாளருக்கும் பதிவான ஓட்டுகளை எண்ணும் முன்பு, மொத்த ஓட்டுகளின் எண்ணிக்கையை பார்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. நக்சலைட் மற்றும் வன்முறை நிறைந்த பகுதிகளில் கூட அதிக அளவில் ஓட்டுகள் பதிவாகி உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.