அகமதாபாத் விமானநிலையத்தில் 4 ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் கைது

குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் விமானநிலையம் வழியாக ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் வருவதாக, உளவுத்துறைக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து குஜராத் மாநில தீவிரவாத தடுப்பு பிரிவு போலீஸாருக்கு, உளவுத்துறை அதிகாரிகள் தகவல் கொடுத்தனர்.

இதைத் தொடர்ந்து விமானநிலையத்துக்கு வந்த 4 தீவிரவாதிகளை, குஜராத் தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸார் நேற்று கைது செய்தனர். கைதான 4 பேரும்இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்றும் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத அமைப்பினரிடமிருந்து அடுத்த கட்ட தகவலுக்காக அவர்கள் காத்திருந்ததாகவும் போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந் துள்ளது.  மேலும், கைதான தீவிரவாதிகளின் புகைப்படங்களையும் தீவிரவாத தடுப்புபிரிவினர் வெளியிட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள தீவிரவாதிகளை ரகசிய இடத்தில் வைத்து போலீஸார் விசாரணை மேற்கொள்ள உள்ளனர்.

ஐஎஸ்ஐஎஸ் அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் கைதுசெய்யப்பட்டுள்ள சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் மே 21 முதல் (இன்று) ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் பிளே ஆஃப் சுற்று ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. இந்நிலையில் இங்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.