தமிழகத்தில் வேளாண் சுற்றுலாவை பிரபலமாக்க தீவிரம்

தமிழகத்தில் தற்போது இயற்கை விவசாயத்தால் கிடைக்கும் விளைபொருட்களுக்கு அதிக மவுசு ஏற்பட்டுள்ளது. அதேசமயம், அதன் உண்மைத் தன்மை பற்றிய சந்தேகமும், விளைபொருட்களின் அதிகப்படியான விலையும், நடுத்தர மக்களை யோசிக்க வைக்கிறது.

இதைப் போக்கும் வகையிலும், இயற்கை விவசாயம் செய்வோருக்கு பலன் அளிக்கும் வகையிலும், வேளாண் சுற்றுலாவை பிரபலப்படுத்தும் நடவடிக்கையில், தமிழக சுற்றுலா துறை இறங்கிஉள்ளது. பொதுவாக, விவசாயிகளை வெளிநாடுகளுக்கு அழைத்துச் சென்று, புதிய தொழில்நுட்பங்களை கற்க வைப்பது தான் வேளாண் சுற்றுலா என்று, பலர் நினைக்கின்றனர்.

ஆனால், நம் நாட்டில் உள்ள வயல், தோப்பு, கொல்லைகளில் இயற்கையாக விவசாயம் செய்வது, நாட்டு இன மாடு, கோழி, வாத்து, பண்ணை குட்டைகள் வாயிலாக மீன்கள், தேனீ பெட்டிகளில் தேனீ உள்ளிட்டவற்றை வளர்ப்பதை மாணவர்கள், சுற்றுலா பயணியர் சென்று பார்ப்பது தான் வேளாண் சுற்றுலா.

இந்த சுற்றுலா, வெளிநாடுகளில் மிகவும் பிரபலம். நம் நாட்டில் மஹாராஷ்டிரா மாநிலத்தில், 2005ல் வேளாண் சுற்றுலா பிரபலமானது.

இதையடுத்து, அதற்கான விதிமுறைகள் உருவாக்கப்பட்டு, அது சார்ந்து இயங்குவோரை ஒருங்கிணைத்து அரசு அங்கீகரித்தது. இதனால், அங்குள்ள விவசாயிகளுக்கு வருவாய் கிடைக்கிறது. அத்துடன், சுற்றுலா பயணியர், ஐ.டி., துறை சார்ந்தோர் இயற்கை விவசாயத்தை பார்வையிடலாம். இயற்கை விளைபொருட்கள், செடி, விதைகளை நேரடியாக வாங்கலாம்; பண்ணைகளில் உள்ள அறைகளில் தங்கி, சமைத்து உண்டு, அங்குள்ள குளம், ஆழ்குழாய் நீரில் குளியல் போடலாம்.

சேற்று வயலில் நாற்று நடுவது, களை எடுப்பது, கட்டை வண்டியில் சவாரி செய்வது, கால்நடைகளுக்கு உணவிடுவது, பால் கறப்பது, சேர்ந்து செல்பி எடுத்துக் கொள்வது உள்ளிட்ட அனுபவங்களையும் பெற முடிகிறது. இதற்காக ஒருவருக்கு, 150 ரூபாய் முதல், வசதிக்கு ஏற்ப 500 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இந்த முறையை தமிழகத்தில் பிரபலப்படுத்தும் வகையில், வேளாண் சுற்றுலா நிர்வாகிகள் இணைந்து, ஒரு கூட்டமைப்பை உருவாக்கி உள்ளனர். அதற்கான அங்கீகாரம், வழிகாட்டி நெறிமுறைகள், இலவச விளம்பரம், மானியம் உள்ளிட்டவற்றை அரசு வழங்க வேண்டும் என, சுற்றுலா துறையிடம் கோரிக்கை வைத்துஉள்ளனர்.

இதுகுறித்து, மதுரை மாத்துாரைச் சேர்ந்த அருள் கூறியதாவது: நான் என் விவசாய பூமியை, வேளாண் சுற்றுலா மையமாக்கி உள்ளேன். எங்கள் ஊரில், 100 ஏக்கரில் இந்த சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில், விவசாயிகளை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டுஉள்ளேன். தமிழகம் முழுதும், 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் இந்த தொழிலில் ஈடுபட்டுள்ளனர். அவர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுஉள்ளோம். ஆங்காங்கே உள்ள கிராமிய கலைஞர்களையும் ஒருங்கிணைத்து, சுற்றுலா பயணியரை மகிழ்விப்பதற்கான நிகழ்ச்சிகள் நடத்தவும் திட்டமிட்டுஉள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார். குழந்தைகள், நகர்ப்புற மாணவர்கள், சுற்றுலா பயணியருக்கு, இயற்கை பற்றிய புரிதலை ஏற்படுத்தும்; விவசாயிகளுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கச் செய்யும் என்பதால், தமிழகத்தில் வேளாண் சுற்றுலா திட்டத்தை மேம்படுத்த முயற்சி மேற்கொண்டுள்ளோம்.