அபுதாபி ஹிந்து கோயிலில் ஒரே நாளில் 65 ஆயிரம் பக்தர்கள் தரிசனம்

அபுதாபியில் சமீபத்தில் திறக்கப்பட்ட ஹிந்து கோயிலில் ஒரே நாளில் 65 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அபுதாபியில் 27 ஏக்கரில் ரூ.888 கோடி செலவில் பிரமாண்ட முதல் ஹிந்து கோயிலை சமீபத்தில் பிரதமர் மோடி திறந்து வைத்தார். அதன்பிறகு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வழிபாடு நடைபெற்று வருகிறது. 1,200க்கும் மேற்பட்ட ஹிந்து கோயில்களை நிறுவி வரும் பாப்ஸ் (BAPS ) அமைப்பு அபுதாபி கோயிலை கட்டி உள்ளது. ஏராளமான பக்தர்கள் தினமும் தரிசனம் செய்து வருகின்றனர்.

(மார்ச் 3) ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 65,000 பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். இதில் காலை நேரத்தில் 40,000க்கும் மேற்பட்ட பக்தர்களும் மாலையில் மேலும் 25,000 பக்தர்களும் தரிசித்துள்ளனர். கூட்டம் அதிகமாக இருந்த போதும், பொறுமையாக வரிசையில் காத்திருந்து, அமைதியாக பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதில் இந்தியா மற்றும் மெக்சிகோ, லண்டன் என பல்வேறு நாடுகளை சேர்ந்த பக்தர்களும் தரிசித்தது குறிப்பிடத்தக்கது.