வெளிநாட்டு மாணவர்களுக்கு கனடா கட்டுப்பாடு: இந்தியர்களையும் பாதிக்கும்

கனடாவில் ஏற்பட்டுள்ள தங்குமிட பிரச்னை காரணமாக வெளிநாட்டு மாணவர்களுக்கு கனடா அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. 2 ஆண்டுகள் மட்டுமே தங்க அனுமதி, வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா 35 சதவீதம் குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

சர்வதேச மாணவர்கள், கனடா நாட்டின் சமூக மற்றும் பொருளாதார கட்டமைப்பு வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றி வருகின்றனர். சில கல்வி நிறுவனங்கள் அதிகளவு சர்வதேச மாணவர்களை அனுமதித்து வருகிறது. இதனால், அந்நாட்டு அரசுக்கு புதிய சவாலை ஏற்படுத்தி உள்ளது. வெளிநாட்டு மாணவர்களுக்கு தங்குமிடம் மற்றும் மருத்துவ பிரச்னைகளை உருவாக்கியது. இதனை சமாளிக்க வெளிநாட்டு மாணவர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்படும் என கனடா அரசு அறிவித்து இருந்தது.

இதனைத் தொடர்ந்து புதிய கட்டுப்பாடுகளை கனடா அரசு அறிவித்துள்ளது. இதன்படி, வெளிநாட்டு மாணவர்கள் இரண்டு ஆண்டுகள் மட்டுமே தங்க அனுமதிக்கப்படுவார்கள். சில குறிப்பிட்ட பட்டமேற்படிப்பு மாணவர்களுக்கு வேலை செய்வதற்கு வழங்கப்படும் விசாக்களை நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ள கனடா அரசு, வெளிநாட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் விசாக்களில் 35 சதவீதம் குறைக்கப்படும் என அறிவித்துள்ளது. இதன்படி 3,60,000 மாணவர்களுக்கு மட்டுமே 2024 ல் விசா வழங்கப்படும் எனக்கூறியுள்ளது.

வெளிநாடுகளில் கல்வி மற்றும் நிரந்தரமாக தங்கும் வசதி ஆகியவற்றில் இந்தியர்களின் முதன்மை தேர்வாக கனடா இருந்து வருகிறது. ஆனால், கனடா அரசின் புதிய கட்டுப்பாடுகள் காரணமாக இந்திய மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் எனத் தெரிகிறது.