இலங்கையிலிருந்து படகு மூலம் 2 பேர் தனுஷ்கோடி வருகை

இலங்கையில் இருந்து தனுஷ்கோடிக்கு அகதிகளாக 2 முதியவர்கள் வந்தனர். இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் 2022 மார்ச் மாதத்தில் இருந்து ஒன்றரை ஆண்டில் 271 பேர் தமிழகத்துக்கு அகதிகளாக வந்துள்ளனர். இந்நிலையில், இலங்கை மன்னார் மாவட்டம் தலைமன்னாரைச் சேர்ந்த நேசப்பெருமாள்(62), கம்பகா மாவட்டம் மல்வானையை சேர்ந்த ராவியத்துல் அதவியா (64) ஆகிய 2 பேரும் இலங்கையில் உள்ள மன்னார் மாவட்டம் பேசாலை கடற்கரையிலிருந்து பைபர் படகில் புறப்பட்டு தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரை பகுதிக்கு  வந்திறங்கி உள்ளனர்.

தகவல் அறிந்த மெரைன் போலீஸார் அவர்களை அழைத்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் மண்டபத்தில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் அவர்கள் இருவரையும் ஒப்படைத்தனர். இவர்களுடன் சேர்த்து தமிழகம் வந்துள்ள அகதிகளின் எண்ணிக்கை 273 ஆக உயர்ந்துள்ளது.