ஆட்கொணர்வு மனு எப்படி தாக்கல் செய்ய முடியும்? நீதிபதி கேள்வி

அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணையில், 3வது நீதிபதி, ‘நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ள போது ஆட்கொணர்வு மனு எப்படி தாக்கல் செய்ய முடியும்?’ எனக் கேள்வி எழுப்பினார். சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்க கோரி அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கியது. இதனால் வழக்கை விசாரிக்க மூன்றாவது நீதிபதியாக நீதிபதி சி.வி.கார்த்திகேயன் நியமிக்கப்பட்டார். இன்று (ஜூலை 11) இந்த வழக்கு சி.வி.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது.

செந்தில் பாலாஜி மனைவி தரப்பில் வழக்கறிஞர் கபில் சிபல் வாதிட்டார். அவரது வாதத்தில் செந்தில் பாலாஜி குற்றம் செய்ததால் கிடைத்த பணத்தை வைத்திருப்பதாகவோ, மறைத்திருப்பதாகவோ ஆதாரம் இல்லை. குற்றம் செய்திருக்கிறார் என்பதற்கு ஆதாரம் இருந்தால் மட்டுமே அமலாக்கத்துறை கைது செய்ய முடியும்; ஆதாரங்கள் முழுமையாக இல்லாதபோது விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக கைது செய்ய முடியாது. அதேபோல், கைதான 24 மணி நேரத்தில் ஆஜர்படுத்தி ஆதாரங்களை சீல்வைத்த கவரில் நீதிமன்றத்தில் தர வேண்டும். இவ்வாறு அவர் வாதிட்டார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி, ‘நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ள போது ஆட்கொணர்வு மனு எப்படி தாக்கல் செய்ய முடியும்?’ எனக் கேட்டார்.