திராவிட மாடல் கட்டுமானத்துக்கு கண்டனம்

நெல்லை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், பேருந்து நிலையங்கள் சீரமைத்தல், வணிக வளாகங்கள், விளையாட்டு அரங்குகள் சீரமைப்பது உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் 1,000 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அவ்வகையில், பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானம் சுமார் 14 கோடி ரூபாய் மதிப்பில் சீரமைக்கப்பட்டு, அரங்கத்தைச் சுற்றி இருபுறமும் இருக்கைகளுடன் கூடிய கேலரிகள், நவீன மேற்கூரைகள் அமைக்கப்பட்டு சமீபத்தில் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டது. இந்த விளையாட்டு மைதான கேலரி, வெறும் அரை மணி நேர மழைக்கே இடிந்து விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திராவிட மாடல் கட்டுமானத்துக்கு இது மற்றொரு உதாரணமாக உள்ளது என மக்கள் கிண்டல் செய்து வருகின்றனர். இந்த சூழலில், இதுகுறித்து தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தனது டுவிட்டர் பக்கத்தில், “நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள வ.உ.சி மைதானத்தில், மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 14 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட மேற்கூரை, அரை மணி நேரம் மழைக்குத் தாங்காமல் இடிந்து விழுந்துள்ளது. இதற்கு முந்தைய ஆட்சிக் காலத்தில் இந்த பணிகளுக்கான டெண்டர் கோரப்பட்டிருந்தாலும், பெருவாரியான பணிகள் 2021ம் ஆண்டுக்குப் பிறகே துவங்கியுள்ளது. இந்த மைதானத்தை மக்கள் பயன்பாட்டிற்குத் திறந்து விடுவதற்கு முன்னர், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறையின் முதன்மை செயலாளரான அபூர்வா 2022ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வ.உ.சி விளையாட்டு அரங்கத்தின் புதுப்பித்தல் பணியைப் பார்வையிட்ட பின், பணிகள் திருப்திகரமாக உள்ளது என்று தெரிவித்துள்ளார். 8 மாத பயன்பாட்டிற்கு பிறகு இடிந்து விழுந்துள்ளது மேற்கூரை. யாரும் இல்லாத நேரத்தில் மேற்கூரை இடிந்து விழுந்ததால் உயிர்ச் சேதம் ஏதும் ஏற்படவில்லை. ஜல் ஜீவன் திட்டம் முதல் ஸ்மார்ட் சிட்டி திட்டம் என, அனைத்து மத்திய அரசின் திட்டங்களிலும் ஊழல் செய்து பணம் சம்பாதிப்பதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டுள்ளது திறனற்ற தி.மு.க அரசு. பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் இந்த மைதானத்தின் புதுப்பித்தல் பணியைச் செய்தவர் மீதும் இதற்குக் காரணமான அதிகாரிகள் மற்றும் துறை அமைச்சர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று தமிழக பா.ஜ.க சார்பாக வலியுறுத்துகிறேன்” என தெரிவித்துள்ளார்.