71,000 பேருக்கு பணி நியமன ஆணை

நாட்டில் வேலை தேடும் இளைஞர்களுக்கு உதவும் வகையில் மத்திய அரசு சார்பில் ரோஜ்கார் மேளா என்ற வேலைவாய்ப்பு வழங்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இதன்படி, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 22ம் தேதி, பிரதமர் மோடி, மத்திய அரசின் பல்வேறு துறைகளில் 75 ஆயிரம் பேருக்கு வேலை வழங்குவதற்கான பணி நியமன உத்தரவுகளை வழங்கினார். இந்த திட்டம், இளைய தலைமுறையினரிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு முறையும் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு மத்திய அரசின் பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்பை பெற்று வருகின்றனர். இதன்படி, நேற்று மெய்நிகர் காட்சி வழியே நடைபெற்ற நிகழ்வில், பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு 71 ஆயிரம் பேருக்கு, மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றுவதற்கான பணி நியமனத்திற்கான ஆணைகள் அடங்கிய கடிதங்களை வழங்கினார். இதனை தொடர்ந்து புதிதாக பணி நியமனம் செய்யப்பட்டவர்களிடம் மெய்நிகர் வழியில் பிரதமர் மோடி பேசுகையில், “நாட்டின் நகர்ப்புற மற்றும் கிராமப்புற பகுதிகளில் ‘ஆத்மநிர்பர் பாரத்’ வேலைவாய்ப்புகளை உருவாக்கி வருகிறது. புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் பொம்மை உள்ளிட்ட விளையாட்டு பொருட்கள் உற்பத்திகள் முன்னணி வகிக்கிறது. மத்திய அரசின் பல்வேறு துறைகளில் 70,000த்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள், பைசாகி நன்னாளில் வேலை வாய்ப்புகளை பெற்றுள்ளனர். உங்களுக்கு என்னுடைய வாழ்த்துகள். தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் பா.ஜ.க. ஆட்சி செய்யும் மாநிலங்களில் அரசு வேலைகளை வழங்குவது மேலும் விரைவுப்படுத்தப்பட்டு உள்ளது. மத்திய பிரதேசத்தில் மட்டுமே 22 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகள் நேற்று ஒரே நாளில் வழங்கப்பட்டுள்ளன. ஒரு அறிக்கையின்படி, பாரதத்தில் ஸ்டார்ட்அப் நிறுவனங்களால் சுமார் 40 லட்சம் நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டு உள்ளன என தெரிய வந்து உள்ளது” என கூறினார். நேற்றுமேலும், புதிதாக பணி நியமனம் செய்யப்பட்டவர்கள், ‘கர்மயோகி பிரராம்ப்’ என்கிற ஆன்லைன் பயிற்சி மூலம் பயிற்சி பெற்று பணியாற்ற வேண்டும். இந்த பயிற்சியில் அரசு ஊழியர்களுக்கான நடத்தை விதிகள், மனித வள கொள்கைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.