மக்கள்தான் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்

பா.ஜ.கவில் விவசாயிகள் இணையும் நிகழ்ச்சி கோவை நவக்கரையில் நடைபெற்றது. இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “ஈரோடு கிழக்கு தேர்தல் விதிமீறல் வழக்குகள் 500’ஐ தாண்டி நீள்கிறது. இது போன்ற பரிசு பொருட்களை கொடுத்துதான் தேர்தல் நடைபெற வேண்டுமா? ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் ஒரு வாக்காளர்களுக்கு சராசரியாக ரூ. 20 ஆயிரத்துக்கும் மேல் செலவு செய்துள்ளனர். கொள்ளை அடிக்கும் பணத்தை தேர்தலின்போது வெளியே எடுக்கின்றனர். கமிஷன் பெற்று சம்பாதித்த பணத்தை பினாமி மூலம் துபாய்க்கு அனுப்பி, அங்கிருந்து மீண்டும் தமிழகத்திற்கு கொண்டு வந்து தேர்தலின்போது செலவு செய்கின்றனர். இதனால், அரசியலில் இருந்து நல்லவர்கள் ஒதுங்க ஆரம்பித்து விட்டனர். இளைஞர்களை அரசியலுக்கு வார சொன்னால், அவர்கள் ஈரோடு கிழக்கு தேர்தலை பார்த்து ஓடி விடுகின்றனர். சட்டப்பேரவை தேர்தலின்போது இவர்களின் தேர்தல் செலவு என்பது ஒரு தொகுதிக்கு ரூ. 45 கோடியாக உள்ளது. அதுவே இடைதேர்தல் என்றால் செலவு ரூ. 100 கோடியை தாண்டுகிறது. ஆளுங்கட்சி ரூ. 250 கோடி வரை செலவு செய்கின்றது. தேர்தல் விதிமீறல் தொடர்பான எந்த வழக்குகள் நீதிமன்றத்தில் நிற்பதில்லை. அது தொடர்பான சட்டத்தில் மாற்றங்கள் தேவை. அரவக்குறிச்சி, திருமங்கலம் போல, ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலும் தலை குனிவை ஏற்படுத்தியுள்ளது. மக்கள்தான் இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இல்லையென்றால் புதியவர்கள் அரசியலுக்கு வர மாட்டார்கள்” என கூறினார்.