தமிழகம் பாரதத்தின் ஆன்மிக தலைநகர்

கோவை திருமலையாம் பாளையத்தை அடுத்த குட்டி கவுண்டன் பதியில் உள்ள தாமரை சர்வதேச பள்ளியின் முதலாம் ஆண்டு விழா, ரோபோட்டிக்ஸ் ஆய்வகம் திறப்பு விழாவில் கலந்துகொண்ட பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி, பாரதத்தில் சில மாநிலங்கள் வளர்ச்சி பெற்றுள்ளன. சில மாநிலங்கள் வளர்ச்சியில் பின்தங்கியுள்ளன. நாட்டில் வளர்ச்சி பெற்ற மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. ஒருவர் தமிழகத்தில் இருந்தாலும் சரி, திரிபுராவில் இருந்தாலும் சரி, அவர்களுக்கு கல்வி, சுகாதாரம், குடிநீர் வசதி, மின்சாரம் ஆகிய அனைத்தும் கிடைக்கும் வகையில் தற்போதைய மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. உதாரணமாக, அனைத்து ஏழை மக்களுக்கும் ரூ. 5 லட்சம் மருத்துவ காப்பீடு கிடைக்கும் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை குறிப்பிடலாம். பாரத வரலாற்றில் முதல்முறையாக தற்போது ஆண்களைவிட பெண்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. மத்திய அரசு, சுகாதாரத் துறையில் மேற்கொண்டு வரும் சீரிய நடவடிக்கைகளே இதற்கு காரணம். தற்போது ராணுவம் உட்பட அரசின் அனைத்து துறைகளிலும் பெண்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது. போர் விமானங்களையும் பெண்கள் இயக்குகின்றனர். நமது தேசத்தின் தொன்மையான கலாச்சாரம், ஆன்மிக கூறுகளை நினைத்து நாம் பெருமைகொள்ள வேண்டும். தேசத்தின் ஆன்மிக தலைநகராக தமிழகம் உள்ளது. இங்கு 1,000 ஆண்டுகளுக்கும் முந்தைய பழமையான கோயில்கள் அப்படியே பாதுகாக்கப்பட்டு வருகின்றன. உலகில் வேறு எங்கும் இதுபோல இல்லை என்பது பெருமைக்குரியது” என கூறினார்.