ஜி20 சிறப்பு கருத்தரங்கம்

ஜி20 உச்சி மாநாட்டின் தலைமைபொறுப்பை பாரதம் ஏற்றுள்ள சூழலில், இது சார்ந்து நாடுமுழுவதும் உள்ள 75 பல்கலைக் கழகங்களை சேர்ந்த மாணவர்களுடன் கலந்துரையாடுவதற்காக சிறப்பு கருத்தரங்கம் நடத்துவதற்கு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. அதன்படி வளரும் நாடுகளுக்கான ஆராய்ச்சி மற்றும் தகவல் அமைப்பு (ஆர்.ஐ.எஸ்) சார்பில் சென்னை ஐ.ஐ.டியில் ஜி20 பல்கலைக் கழக இணைப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பேசிய ஆர்.ஐ.எஸ் அமைப்பின் ஆட்சி மன்றக்குழு உறுப்பினர் சேஷாத்ரி சாரி, “பருவநிலை மாற்றத்தால் நமக்கு பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. புவி வெப்பமயமாதலால் பனிப்பாறைகள் உருகி கடல்மட்டம் உயர்தல் உள்ளிட்ட சூழ்நிலைகளில் உலக நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து செயல்படவேண்டும். நாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் அனைவருக்குமானதாக இருப்பதால் நாம் ஒன்றாக வளர வேண்டும். ‘ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்’ என்பதுதான் பாரதம் உலகுக்கு சொல்லும் கருத்தாகும். நாடு முழுவதும் நடைபெறும் இந்த கருத்தரங்கின் நோக்கம் ஜி20 செயல்முறையில் இளைய தலைமுறையினரை ஈர்த்து ஊக்கப்படுத்துவதாகும்” என கூறினார். இந்நிகழ்வில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், ஐ.ஐ.டி பேராசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதேபோல, பாண்டிச்சேரி பல்கலைக் கழகத்திலும் கடந்த 23ம் தேதி சிறப்பு கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டது. துணைவேந்தர் பேராசிரியர் குர்மீத் சிங், டாக்டர் சேஷாத்ரி சாரி, ஓய்வுபெற்ற ஏர் மார்ஷல் டாக்டர் எம். மாதேஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பாண்டிச்சேரி பல்கலைக் கழக மாணவர்கள் மட்டுமின்றி அருகில் உள்ள பிற கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த மாணவர்களும் மற்றும் புதுவை பல்கலைக் கழக வளாகத்தில் உள்ள கே.வி. பள்ளியின் மாணவ மாணவியரும் கலந்து கொண்டனர்.