கோயில் ஊழியர் படுகொலை

திருநெல்வேலி மேலச்செவல் பகுதியில் உள்ள பழமையான நவநீதகிருஷ்ண சுவாமி திருக்கோயிலின் சுற்றுச் சுவரில், அதே பகுதியைச் சேர்ந்த கொம்பையா உள்ளிட்ட சிலர் அமர்ந்து மது அருந்தினர். அவர்களை ஹிந்து சமய அறநிலையத் துறை கோயில் ஊழியரான கிருஷ்ணன் தட்டிக்கேட்டார். இதையடுத்து கிருஷ்ணனை கோயில் வளாகத்துக்குள்ளேயே அவர்கள் வெட்டி படுகொலை செய்தனர். இந்த சம்பவத்திற்கு தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவரது டுவிட்டர் பதிவில், “நெல்லை மேலச்செவல் கிராமத்தைச் சேர்ந்த ஹிந்து சமய அறநிலையத் துறை கோயில் ஊழியர் கிருஷ்ணன், கோயில் சுற்றுச் சுவரில் அமர்ந்து மது அருந்தியதை தட்டிக் கேட்டதால், கோயில் வளாகத்துக்குள்ளேயே வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எவ்வளவு மோசமாகச் சீர்குலைந்துள்ளது என்பது ஒருபுறம். கோயில்களில் நடைபெறும் முறைகேடுகளையும், சட்டத்திற்குப் புறம்பான செயல்களையும் தடுக்க வேண்டிய ஹிந்து சமய அறநிலையத் துறை, கோயில் உண்டியல் பணத்தை மட்டுமே நோக்கமாக வைத்து, கோயில்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள், பாதுகாப்பு ஆகியவற்றை கோட்டை விட்டுக் கொண்டிருக்கிறது. தமிழகம் முழுவதும், சாராயக் கடைகளைத் திறந்து வைத்து வியாபாரம் செய்வது, இளைஞர்கள் இது போன்ற குற்றச் செயல்களை புரிய காரணமாக அமைந்திருக்கிறது. இனியும் கோபாலபுர குடும்பத்தை மகிழ்விப்பது மட்டுமே தனது பணி என்றிருக்காமல், உடனடியாக அமைச்சர் பி.கே சேகர்பாபு, கோயில் ஊழியர்களுக்கும், உடைமைகளுக்கும் உரிய பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும், உயிரிழந்த கோயில் ஊழியர் குடும்பத்திற்கு முதல்வர் உடனடியாகத் தகுந்த நிவாரணம் அளிக்க வேண்டும் என்றும் அவரது இரு மகன்களுக்கும் அரசு வேலை வழங்க வேண்டும் என்றும் தமிழக பா.ஜ.க சார்பில் வலியுறுத்துகிறேன்” என்று கூறியுள்ளார்.