எல்லாவற்றிற்கும் ஒரு எல்லை உண்டு

2002ல் நடைபெற்ற குஜராத் வன்முறை தொடர்பான வழக்கில் காங்கிரஸ் தரப்பில் பிரதமர் மோடி உட்பட 63 பேர் மீது  ஜோடிக்கப்பட்ட மேல்முறையீட்டு மனு அளிக்கப்பட்டதை உச்சநீதிமன்றம் கடுமையாக கண்டித்ததோடு அதிகார துஷ்பிரயோகத்தின் மூலம் இத்தகைய செயல்களில் ஈடுபட்ட அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து சமூக ஆர்வலர் என்ற போர்வையில் செயல்பட்டுவந்த இடதுசாரி சிந்தனையாளரான டீஸ்டா செடல்வத் கைதுசெய்யப்பட்டார். மேலும் குஜராத் கலவர வழக்கில் பொய்யான தகவல்களை அளித்த ஐ.பி.எஸ் அதிகாரியான ஆர்.பி ஸ்ரீகுமார் கைதுசெய்யப்பட்டார். முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி சஞ்சீவ் பட் பெயரும் இடம்பெற்றுள்ளது. ஆனால் ஏற்கெனவே வேறொரு வழக்கில் தொடர்புடைய அவர் பணிநீக்கம் செய்யப்பட்டு சிறையிலிருக்கிறார். இதனிடையே ஆர்.பி ஸ்ரீகுமார் கைதை முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானியான நம்பி நாராயணன் வரவேற்றுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய நம்பி நாராயணன் “ஜோடிக்கப்பட்ட கதைகள் மூலம் குஜராத் கலவர வழக்கை பரபரப்பாக்க முயன்றதாக ஸ்ரீகுமார் கைதுசெய்யப்பட்டுள்ளார். அவர்மீது குற்றசாட்டு இருப்பதை நான் அறிந்தேன். என் விஷயத்திலும் அவர் இப்படித்தான் செயல்பட்டார். நமது அமைப்பானது எந்த ஒரு அறிக்கையும் கொடுத்துவிட்டு தப்பிக்கும் விதத்தில் உள்ளது. ஆனால் எல்லாவற்றிற்கும் ஒரு எல்லை உண்டு. அவர் கைதுசெய்யப்பட்டுள்ளதை அறிந்து நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். அவர் தனது அதிகாரத்தின் மாண்பையும் அனைத்து வரம்புகளையும் மீறியுள்ளார்” என குறிப்பிட்டுள்ளார்.