பிரதமர் ஐதராபாத் சென்னை பயணம்

பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்னை மற்றும் ஐதராபாத் பயணம் மேற்கொள்கிறார். ஐதராபாதில் உள்ள இந்தியன் ஸ்கூல் ஆஃப் பிசினஸ் கல்வி நிறுவனத்தின் 20வது ஆண்டு விழாக் கொண்டாட்டத்தில் பிற்பகல் 2 மணியளவில் பிரதமர் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார். பின்னர் மாலை 5:45 மணியளவில் சென்னையில் உள்ள ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் ரூ. 31,400 கோடி மதிப்பிலான 11 திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்து, அடிக்கல் நாட்டுகிறார். இதில் 75 கி.மீ தொலைவுள்ள ரூ. 500 கோடி மதிப்பில் மேம்படுத்தப்பட்ட மதுரை தேனி இடையேயான (அகல ரயில் பாதையாக மாற்றும் திட்டம்) ரயில் தடம், சென்னை தாம்பரம் செங்கல்பட்டு இடையேயான 30 கி.மீ தொலைவுக்கான 3வது ரயில்பாதை, சுமார் ரூ. 850 கோடி மற்றும் 910 கோடி ரூபாய் மதிப்பில் நிறைவேற்றப்பட்டுள்ள 115 கி.மீ நீளமுள்ள எண்ணூர் செங்கல்பட்டு பிரிவு மற்றும் 271 கி.மீ நீளமுள்ள திருவள்ளூர் பெங்களூரு பிரிவு இயற்கை எரிவாயு குழாய் திட்டங்கள், பிரதமரின் நகர்ப்புற வீட்டுவசதித் திட்டத்தின் கீழ், குறைந்த செலவில் வீடுகட்டும் திட்டத்தின் ஒரு பகுதியாக சென்னையில் ரூ. 116 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 1152 வீடுகள், சென்னை துறைமுகத்தையும், மதுரவாயலையும் இணைக்கும் (என்எச்-4), 21 கி.மீ. தூர ஈரடுக்கு, நான்குவழி உயர்மட்டச்சாலை திட்டம், 262 கி.மீ தூர பெங்களூரு சென்னை விரைவுச்சாலை திட்டம், சென்னை எழும்பூர், ராமேஸ்வரம், மதுரை, காட்பாடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய ஐந்து ரயில் நிலையங்கள் மறுசீரமைப்பு பணிகள், 262 கிலோமீட்டர் தூர பெங்களூரு சென்னை விரைவுச்சாலை என பல திட்டங்கள் இடம் பெருகின்றன. இந்தத் திட்டங்கள் தமிழகத்தின் சமூக பொருளாதார வளர்ச்சிக்கு உத்வேகம் அளிப்பதோடு, பல்வேறு துறைகளில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் வழிவகுக்கும்.