எலி விழுங்கிய வைரம்

எலி ஒன்று வைர வியாபாரி வீட்டிலிருந்து ஒரு வைரத்தை விழுங்கிவிட்டது. மிகவும் விலை உயர்ந்த வைரம் அது. வியாபாரி எலி பிடிப்பவனை பார்த்து எப்படியாவது அந்த எலியை “ஷூட்” செய்து வயிற்றில் இருக்கும் வைரத்தை எடுக்க உதவ வேண்டும் என கேட்டுக் கொண்டார். எலி பிடிப்பவனும் தன் துப்பாக்கியுடன் வந்துவிட்டான். அதை ஷூட் செய்ய. எலி அங்கே இங்கே என்று போக்கு காட்டி ஓடியதில் திடீரென்று ஆயிரக்கணக்கான சக எலிகள் ஒன்று கூடிவிட்டன.

ஆயிரக்கணக்கான எலிகளுக்கு இடையேயும் அந்த வைரம் விழுங்கிய எலி மட்டும் அந்த எலிகள் கூட்டத்தோடு சேராமல் ஒதுங்கி தனித்தே நின்றிருந்தது. எலி பிடிப்பவனுக்கு அது வசதியாக போய்விட்டது. சரியாக குறி பார்த்து அந்த எலியை சுட்டான். எலி இறந்துவிட்டது. வைர வியாபாரி சந்தோஷமாக அந்த எலியின் வயிற்றைக் கிழித்து வைரத்தை எடுத்துக்கொண்டான்.

ஆனால் ஒரு கேள்வியை எலி பிடிப்பவனைப் பார்த்து வைர வியாபாரி கேட்டான். “ஆமாம்! அந்த எலி மாத்திரம் மற்ற எலிகளோடு சேராமல் தனியே தனித்தே இருந்ததே!

நீயும் அதை சரியாக அடையாளம் கண்டு சுட்டாய்.. என்ன காரணம்?” என்றான்.

அந்த எலி பிடிப்பவன், ‘இப்படித்தான்… அனேகர், திடீர் பணக்காரர் ஆனதும் மற்றவர்களை விட நாம் உயர்ந்தவர் என்ற எண்ணம் கொண்டு மற்றவர்களை தன்னுடன் சேர்க்காமல் தூரத்தில் வைத்துக் கொள்வார்கள்.  அதுவே ஆபத்தில் அவர்களுக்கு உதவாமல் போய்விடுகிறது” என்றான்.

உண்மையான உறவுகளும் நட்பும் அப்படித்தான். சிலர் இடையில் வந்த அழிந்துபோகும் செல்வத்தை நம்பி, கடவுள் கொடுத்த உறவுகளையும் உண்மையான நட்பையும் அசட்டை செய்து விட்டுவிடுகிறார்கள். ஆயிரம் கோடி செல்வம் இருந்தாலும் உலகளாவிய ஆத்மாவுக்கு அது ஆறுதல் சொல்லாதே.

(சமூக ஊடகத்தில் இருந்து)