அதை நீங்கள் முடிவு செய்ய வேண்டாம்

டெல்லியில் ரைசினா சர்வதேச மாநாடு நடைபெற்றது. இதில் 90 நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்கள், முன்னாள் பிரதமர்கள் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டனர். இம்மாநாட்டின் இறுதி நாள் நிகழ்ச்சியில் ரஷ்யா உக்ரைன் விவகாரத்தில் பாரதத்தின் நிலைப்பாடு குறித்துப் பேச்சு எழுந்தது. அப்போது பேசிய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், “உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் நிறுத்தப்பட வேண்டும் என்பதில் பாரதத்திற்கு எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. இரண்டு நாடுகளும் போரை நிறுத்திவிட்டு பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வுகாண வேண்டும் என பாரதம் விரும்புகிறது. போரை நிறுத்துவதற்கு உலக நாடுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும். ஆசியாவில் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகள் கடும் நெருக்கடியைச் சந்தித்தபோது ஐரோப்பிய நாடுகள் எங்கே சென்றன? உக்ரைன் விவகாரத்தில் பாரதம் குறிப்பிட்ட நிலைப்பாட்டை எடுக்க மேற்கத்திய நாடுகள் அழுத்தம் கொடுக்கின்றன. ஆனால், பாரதம் நடுநிலைத் தன்மையைக் கையில் எடுத்துள்ளது. உலகை மகிழ்விப்பதைவிட, நாம் யார் என்று புரிந்துகொண்டு, நமது கொள்கைகள் அடிப்படையிலேயே அனைத்து விஷயங்களையும் அணுக வேண்டும். பாரதம் ரஷ்யாவுடனான அதன் வரலாற்று வர்த்தக உறவுகளைத் தொடர்ந்துவருகிறது. பாரதம் யார் என்பதை உலக நாடுகள் வரையறுக்க வேண்டாம். மற்றவர்கள் எங்களை எப்படி வரையறுக்கிறார்கள் என்பது முக்கியம் இல்லை. பாரதம் சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆன நிலையில், மற்ற நாடுகளின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்ற எண்ணத்தை பின்னுக்குத் தள்ளவேண்டிய தருணத்தில் பாரதம் உள்ளது” என ஆணித்தரமாக எடுத்துரைத்தார்.