தமிழக வீரருக்கு மேகாலயாவில் சிலை

கோவை நாயக்கன்பாளையத்தை சேர்ந்த கண்ணாளன் கென்னடி என்ர ராணுவ வீரர், 1993ல் காஷ்மீர் சம்சாபாரி பகுதியில் உள்ள ராணுவ முகாமில் பணியாற்றிக் கொண்டிருந்தார். அப்போது, பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் எல்லையை தாண்டி பாரதத்திற்குள் ஊடுருவினர். உடனடியாக அங்கு விரைந்த கென்னடி உள்ளிட்ட ராணுவ வீரர்கள்  பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்தினர். கென்னடி நான்கு பயங்கரவாதிகளை சுட்டு வீழ்த்தினார். அவர் முகாமுக்கு திரும்பியபோது பனி பாறைகளுக்கு இடையே கால் சிக்கிக்கொண்டது. தப்பி ஓடிய பயங்கரவாதிகள் கென்னடியை சுட்டுக்கொன்றனர். இதில் வீரமரணம் அடைந்த கென்னடிக்கு ‘கீர்த்தி சக்ரா’ விருது வழங்கப்பட்டது. தற்போது கென்னடியின் வீரத்தை போற்றும் வகையில் மேகாலயாவில் உள்ள டெக்கான் டெவில்ஸ் யூனிட் சார்பில் உருவ சிலை அமைக்கப்பட்டுள்ளது. திறப்புவிழா நிகழ்ச்சியில், கென்னடியின் குடும்பத்தினர், ராணுவ வீரர்கள் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர். முன்னதாக, அவரது நினைவாக நாயக்கன்பாளையத்தில் நினைவிடம் எழுப்பப்பட்டு அங்கு அவர் பயன்படுத்திய பொருட்கள், ராணுவத்தில் பணியாற்றிய போது பெற்ற பதக்கங்கள் உள்ளிட்டவை பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.