முயற்சி திருவினையாக்கும்

ஒரு காட்டில் கழுகு ஒன்று வாழ்ந்து வந்தது. அதற்கு இறைவனிடம் கண்மூடித்தனமான நம்பிக்கை. அடிக்கடி பாறை மீது அமர்ந்து தியானம் செய்யும். ஒருநாள் திடீரென்று “இறைவனுக்கு நாம் தியானம் செய்வது தெரியுமா?” என்று சந்தேகம் வந்தது. பின்னர், இறைவனுக்கு எல்லாம் தெரியும் என்று சமாதானம் செய்துகொண்டது.

ஒருநாள் அந்தக் கழுகு ‘இன்று எனக்கு உணவு கிடைக்குமா? இறைவன்தான் எல்லோருக்கும் படியளப்பவன் ஆயிற்றே” என்று யோசித்தது. பாறை மீது நின்று, “இறைவா, இன்று எனக்கு உணவு கிடைக்குமா?” என்று கேட்டது. விண்ணிலிருந்து ஒரு குரல் “உனக்கு இன்று உணவு உண்டு” என்று பதில் கூறியது. மகிழ்ச்சியுடன் “இன்று இரை தேடும் வேலை இல்லை, எப்படியும் உணவு கிடைத்துவிடும்” என்று நம்பிக்கையுடன் தியானம் செய்தது. நேரம் செல்லச்செல்ல கழுகுக்குப் பசி வாட்டியது. ஆனாலும் கண்களைத் திறக்காமல் தியானத்திலேயே அமர்ந்திருந்தது. மதியம் ஆயிற்று, மாலையும் போயிற்று. இரவும் வந்துவிட்டது.

“நம்மை இறைவனே ஏமாற்றிவிட்டாரே” என்று மனம் வருந்தி புறப்படத் தயாரானது கழுகு. அப்போது அந்த குரல் “என்ன குழந்தாய். சாப்பிட்டாயா?” என கேட்டது. கழுகுக்கு அழுகையே வந்துவிட்டது. “குழந்தாய் சற்று திரும்பிப் பார். உன் பின்னாலேயே உனக்கான உணவு காத்திருக்கிறது” என்றது அக்குரல். கழுகு பின்னால் பார்த்தது. அங்கே ஒரு பெரிய எலி இறந்து கிடந்தது. கழுகு புன்னகையுடன், “இதனைக் காலம் தாழ்த்திக் கொடுத்தாயே இறைவா?” என்றது.

இறைவன் “குழந்தாய், உனக்குரிய நேரத்தில் உணவு வந்துவிட்டது. நீதான் அதைத் தேடி எடுக்காமல் காலம் தாழ்த்திவிட்டாய். திரும்பிப் பார்க்கும் முயற்சிகூடச் செய்யாமல் உணவு எப்படிக் கிடைக்கும்?” ஒரு வேளை உணவுகூட உழைக்காமல் உண்ணக்கூடாது. அப்போதுதான் இறைவனின் அருளையும் பெற முடியும்” என்று கழுகுக்கு ஆசி கூறி மறைந்தார் இறைவன். அன்று முதல் கழுகு உழைப்பையே தியானமாக எண்ணிக் கடமையைச் செய்தது.

தெய்வம் நம்பிக்கை அனைவரிடமும் இருக்க வேண்டும். ஆனால் தெய்வத்தை மட்டுமே நம்பி ஒரே இடத்தில் அமர்ந்து விடக்கூடாது. முயற்சி இல்லாமல் எதுவும் கிடைப்பதில்லை. உழைப்பவரை என்றும் வறுமை அண்டுவதில்லை.