ஜிதின் பிரசாதா பா.ஜ.கவில் இணைந்தார்

உத்தரபிரதேச மாநில சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற இருக்கிறது. அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையில் மீண்டும் தேர்தலை சந்திக்க இருப்பதாக அம்மாநில பா.ஜ.க அறிவித்துள்ளது. எனவே, மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றப் போவது உறுதி என பாஜகவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் இளம் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜிதின் பிரசாதா, டெல்லி பா.ஜ.க தலைமை அலுவலகத்தில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் முன்னிலையில் பா.ஜ.கவில் இணைந்தார். இது அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் அதிர்ச்சியையும், பின்னடைவையும் ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சியில் மறுசீரமைப்பு தேவை என்பதை வலியுறுத்தி சோனியா காந்திக்கு, 23 தலைவர்கள் கடிதம் எழுதினார்கள் என்பதும் அதில் ஜிதின் பிரசாதாவும் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.