போயிங் நிறுவனத்தின் கொரோனா மருத்துவமனை

உத்தரபிரதேசம், கோரக்பூரில் 200 ஐ.சி.யு படுக்கைகள் கொண்ட கொரோனா மருத்துவமனையை உருவாக்க அமெரிக்காவை சேர்ந்த போயிங் விமான நிறுவனம் முன்வந்துள்ளது. எய்ம்ஸ் வழங்கும் இடத்தில் இந்த மருத்துவமனை அமைக்கப்படும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. முன்னதாக, கர்நாடகாவின் பெங்களூரு யெலஹங்காவில் 200 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையத்தை அமைப்பதாக போயிங் அறிவித்திருந்தது. அரசாங்க வளங்கள், கிடைக்கும் உதவிகள் என அனைத்தையும் பயன்படுத்துவதுடன் பல்வேறு பெரு நிறுவனங்கள், தேசிய நிறுவனங்களுடன் இணைந்து மாநிலத்தில் மருத்துவ வசதிகளை விரிவுபடுத்துவதில் உத்தர பிரதேச அரசு மிக வேகமாக செயல்பட்டு வருகிறது. கொரோனா மருத்துவமனைகளின் செயல்பாடுகளை விரைவுபடுத்துமாறு முதல்வர் யோகி ஆதித்தியநாத் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதுடன் நேரடியாகவும் ஆய்வு செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.