பூவராக சுவாமிக்கு முஸ்லிம்கள் வரவேற்பு

மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக, ஸ்ரீ முஷ்ணம் பூவராக சுவாமிக்கு, முஸ்லிம்கள் நேற்று வரவேற்பு அளித்தனர்.

கடலுார் மாவட்டம், சிதம்பரம் அடுத்த கிள்ளை முழுக்குத்துறையில், மாசிமகம் திருவிழா நேற்று நடந்தது. ஸ்ரீ முஷ்ணம் பூவராக சுவாமி, கிள்ளை தைக்கால் தர்கா வழியாக, தீர்த்தவாரிக்காக, முழுக்குத்துறை கடற்கரைக்கு நேற்று காலை சென்றார்.தைக்கால் தர்காவில், டிரஸ்டி சையத் சக்காப் தலைமையில் முஸ்லிம்கள், ஹிந்து முறைப்படி, தாம்பூல தட்டில் பழம், 5 மரக்கால் அரிசி, 501 ரூபாய், பட்டு சார்த்தி, வரவேற்பு கொடுத்தனர்.

தொடர்ந்து, ஸ்ரீ முஷ்ணம் பூவராக சுவாமி ஆச்சாரியார்கள் தர்காவிற்கு சென்று, மாலை, நாட்டு சர்க்கரை, வத்தி உள்ளிட்டவைகளை டிரஸ்டிடம் வழங்கி, உலக அமைதி வேண்டி சிறப்பு பிரார்த்தனை நடந்தது.தர்கா டிரஸ்டி சையத் சக்காப் கூறுகையில், ”ஸ்ரீ முஷ்ணம் பூவராக சுவாமிக்கு, முன்னோர் வழக்கப்படி, ஆறு தலைமுறையாக வரவேற்பு கொடுக்கப்பட்டு வருகிறது,” என்றார்.