150 ரெயில்கள்,50 ரெயில் நிலையங்கள் தனியார் மயம்

150 ரெயில்கள் மற்றும் 50 ரெயில் நிலையங்களை தனியாரிடம் ஒப்படைப்பதற்கான உயர் அதிகாரம் கொண்ட சிறப்பு குழுவை உருவாக்கும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.

பொதுமக்களின் போக்குவரத்து சாதனங்களில் ரெயிலுக்கு முக்கிய இடம் உண்டு. நவீன தொழில்நுட்ப யுகத்தில் நிறைய மாற்றங்கள் வந்தாலும், ரெயில் பயணம் என்பது தனி சுகமே. தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப, மனிதனுக்கு புதுப்புது பெயரில் நோய்களும் வந்த வண்ணம் உள்ளன. இதனால், தற்போதைய காலக்கட்டத்தில் அனைவருக்கும் ரெயில் பயணம் என்பது தவிர்க்க முடியாததாகி விட்டது.

இதற்கிடையே மத்திய அரசு ரெயில்வே துறையை தனியார்மயமாக்கும் திட்டங்களை கொண்டு வந்தது. இதற்காக, ரெயில்வே தண்டவாள பராமரிப்பு பணி உள்ளிட்ட பயணிகளின் பாதுகாப்பு தொடர்புடைய அனைத்து பிரிவுகளும் தனியாருக்கு ஒப்பந்த அடிப்படையில் கொடுக்கப்பட்டது.

சுகாதார பணிகள் அனைத்தும் தற்போது தனியார் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. ரெயில் நிலையங்களை தனியாருக்கு குத்தகைக்கு கொடுப்பதற்காக, ஸ்டேசன் இயக்குனர்கள் என்ற பதவி உருவாக்கப்பட்டது. இதில், ஒப்பந்த பணிகளை மேற்கொள்பவர்கள் பணியாளர்களுக்கு தொழிலாளர் சட்டப்படி உரிய சம்பளம், பி.எப். இ.எஸ்.ஐ. ஆகியன வழங்குவதில்லை.இதனால், ஒப்பந்த தொழிலாளர்கள் அடிக்கடி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், தற்போது, மத்திய அரசின் ரெயில்வே அமைச்சகம் ‘பியூச்சர் ரோடு மேப்’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தில் ரெயில்வே துறையை நவீன மயமாக்குதல் என்ற பெயரில் அனைத்து பிரிவுகளையும் தனியாருக்கு ஒப்பந்த அடிப்படையில் கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக, பயணிகள் செல்லும் சொகுசு ரெயில்களான ராஜதானி மற்றும் சதாப்தி ரெயில்களை தற்போது சோதனை அடிப்படையில் தனியாருக்கு குத்தகைக்கு விடப்போவதாக அந்த திட்ட அறிக்கையில் கூறப்பட்டது. படிப்படியாக தேஜஸ், பிரிமீயம் ரெயில்களை தனியாருக்கு குத்தகைக்கு விட உள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
ரெயில்வே துறையை தனியாரிடம் ஒப்படைப்பதற்கு பல்வேறு எதிர்ப்புகள் எழுந்து வரும் நிலையில், டெல்லி – லக்னோ வழித்தடத்தில் இயங்கும் தேஜஸ் அதிவேக ரெயில் தனியார் கட்டுப்பாட்டில் ஒப்படைக்கப்பட்டது.  தற்போது மேலும் 150 ரெயில்கள் மற்றும் 50 ரெயில் நிலையங்கள் தனியாரிடம் ஒப்பந்த முறையில் ஒப்படைக்கப்பட உள்ளன.

இந்த பணிகளை மேற்கொள்வதற்காக உயர் அதிகாரம் கொண்ட சிறப்பு குழு ஒன்று அமைக்கப்பட உள்ளது. இது தொடர்பாக நிதி ஆயோக் குழும தலைமை அதிகாரியான அமிதாப் காண்ட், இந்திய ரெயில்வே வாரிய தலைவரான வி.கே யாதவிற்கு கடிதம் எழுதி இருந்தார்.

இந்த சிறப்பு குழுவில் வி.கே.யாதவ் மற்றும் அமிதாப் காண்ட்   தவிர பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளர், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை  செயலாளர் ஆகியோரும் இடம்பெறுவர் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

நிதி ஆயோக் குழு தலைவர் அமிதாப் காண்ட், இது குறித்து

உலகத்தரம் வாய்ந்த ரெயில் நிலையங்களாக மாற்ற 400 ரெயில் நிலையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், சில முக்கிய ரெயில் நிலையங்களே முதலில் மேம்படுத்தப்படவுள்ளன. சமீபத்தில் ரெயில்வே மந்திரியுடன் மேற்கொண்ட  கலந்துரையாடலில் குறைந்தபட்சம் 50 ரெயில் நிலையங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டிய அவசியம் உள்ளது என்று முடிவு செய்யப்பட்டது.

சமீபத்தில், 6 விமான நிலையங்களை தனியார்மயமாக்கும் பணிகளை மேற்கொள்ள சிறப்பு குழு அமைத்தது போன்று இந்த விஷயத்திலும் காலவரையறை முறையில் பணிகளை மேற்கொள்ள குழு அமைக்கப்படும்.
முதல் கட்டமாக 150 பயணிகள் ரெயில்களை இயக்க தனியார் ரெயில் பணியாளர்களை அமர்த்த ரெயில்வே முடிவு செய்துள்ளதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள்” என கூறினார்.

ரெயில்வே பொறியியல் வாரியம் மற்றும் ரெயில்வே போக்குவரத்து வாரியம் உறுப்பினர்களும் இந்த குழுவில் இடம்பெறுவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.