11 கோடி சிறு விவசாயிகளுக்கான ‘பிஎம் கிசான்’ நிதியுதவியை ரூ.8 ஆயிரமாக உயர்த்த திட்டம்

சிறு விவசாயிகளுக்கான வருடாந்திர நிதியுதவியை ரூ.6,000-ல் இருந்து ரூ.8,000 ஆக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள குறு, சிறு விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில், ‘பிரதமர் கிசான் சம்மான் நிதி’ (பிஎம் கிசான்) திட்டத்தை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 2018 டிசம்பர் மாதம் தொடங்கி வைத்தது. இதன்படி, பயிர் சாகுபடி செய்வதற்கான நிலம் வைத்துள்ள குறு, சிறு விவசாயிகளின் குடும்பத்துக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படுகிறது. குறு, சிறு விவசாயிகளுக்கு குறைந்தபட்ச வருமான ஆதரவு வழங்குவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் ஆகும். வருமான வரி செலுத்துவோர், மத்திய, மாநில அரசு ஊழியர்கள், முன்னாள், இந்நாள் எம்.பி., எம்எல்ஏக்கள், மேயர்கள் உள்ளிட்டோர் விவசாயம் செய்பவர்களாக இருந்தாலும், இதில் பயன்பெற முடியாது.

தலா ரூ.2 ஆயிரம் வீதம் ஆண்டுக்கு 3 தவணையாக இந்த தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. இந்த திட்டத்தால் நாடு முழுவதும் 11 கோடி விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். கடந்த 5 ஆண்டுகளில் இதுவரை 14 தவணையாக ரூ.2.42 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது. வரும் நவம்பர் அல்லது டிசம்பரில் 15-வது தவணை தொகை வழங்கப்பட உள்ளது. இந்த திட்டத்துக்காக நடப்பு 2023-24 நிதி ஆண்டுக்கு மத்திய பட்ஜெட்டில் ரூ.60 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில், சிறு விவசாயிகளுக்கான வருடாந்திர நிதி உதவியை ரூ.6,000-ல் இருந்து ரூ.8,000 ஆக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த நிதிஉதவியை பெறுவதற்கான தகுதியை தளர்த்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் பயனாளிகள் எண்ணிக்கை அதிகரிக்கும். இதனால்,அரசுக்கு ஆண்டுக்கு ரூ.20 ஆயிரம்கோடி கூடுதல் செலவு ஏற்படும். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வரும் 2024-ம் ஆண்டின் தொடக்கத்தில் மக்களவை தேர்தல் நடக்க உள்ளது. இதில் 3-வதுமுறையாக வெற்றி பெற்று பிரதமர் பதவியில் நரேந்திர மோடி நீடிக்கும் முனைப்புடன் பாஜக செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் நடத்தப்பட்ட கருத்து கணிப்பிலும் பிரதமர் மோடிக்கு 55% பேர் ஆதரவு தெரிவித்திருந்தனர்.

மக்களவை தேர்தல் வெற்றிக்கு மிகப்பெரிய வாக்கு வங்கியாக விவசாயிகள் உள்ளனர். சுமார் 141 கோடி மக்கள்தொகை கொண்டஇந்தியாவில் 65% பேர் கிராமங்களில் வசிக்கின்றனர். விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கவும் ஏழை, நடுத்தர மக்கள்நலனை கருத்தில் கொண்டும் மத்திய அரசு சில நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, பாசுமதி அல்லாத அரிசி ஏற்றுமதிக்கு தடை உட்பட பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ஏழை மக்களுக்கான சமையல் எரிவாயு மானியத்தை மத்திய அரசு சமீபத்தில் ரூ.300 வரை அதிகரித்தது.

கடந்த 5 ஆண்டுகளில் இல்லாதஅளவுக்கு இந்த ஆண்டில் பருவமழை குறைவாக பெய்துள்ளது. இதனால் வேளாண் விளைபொருள் உற்பத்தி குறையும் என்ற அச்சமும் உள்ளது. இத்தகைய சூழலில், ஏழை மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச உணவு தானிய திட்டத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பது குறித்தும் மத்திய அரசு பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.