விவசாயமே யாக, யக்ஞம்! மகான்களின் வாழ்வில்

பட்டுப்புடவை, ரத்தினம், நெய் போன்ற அரிய பொருட்களை ஹோமத்தில் அக்கினியில் போட்டு வீணாக்கலாமா?” என்று கேட்டார் ஒருவர்.
அதற்கு ஸ்ரீ சிருங்கேரி சாரதாபீட ஜகத்குரு ஸ்ரீ அபிநவ வித்யாதீர்த்த மகா சுவாமிகள், நீ வயலில் நெல் விதையை அள்ளி வீசி விதைப்பதைப் பார்த்திருக்கிறாயோ? அதன் தத்துவம் புரியாத ஒருவன் என்ன சொல்லுவான்? ‘ஐயோ! நன்றாக உணவாக சமைக்கக்கூடிய அருமையான நெல்மணிகளை இப்படிச் சேற்றில் தூக்கி எறிந்துவிட்டுப் போகிறானே? இந்த நெல்லைக் கொண்டு எவ்வளவு பேர் பசியாறி இருக்கலாம்!’ என்று அங்கலாய்த்துக் கொள்வான். ஆனால் நெல் விதைக்கிற விவசாயியைக் கேட்டுப் பார்த்தால், அவன் என்ன பதில் சொல்லுவான்?
‘ஐயா! உமக்கு நான் செய்கிற காரியம் புரியவில்லை. நான் போடும் ஒவ்வொரு நெல்மணியும் ஐம்பது நெல்மணிகளைக் கொடுக்கும். நான் செய்யும் வேலையின் பயனாக, நீர் சொல்வதைக் காட்டிலும் ஐம்பது மடங்கு பேர் பயன் அடைவார்கள். உலகத்துக்கு நன்மை உண்டாகும்’ என்று அல்லவா பதில் சொல்லுவான். அக்னி முகேந தேவா என்று சொல்வார்கள். நமக்கு வான் மழையைக் கொடுத்து, வெப்பத்தையும் அளித்து, வண்மையையும் செழுமையையும் அருளும் தேவர்களுக்கு நாம் அந்த அருளை வேண்டிச் செய்வது அல்லவா அந்த ஹோமம்? அப்படி நாம் செய்யும் பிரார்த்தனையில், நாம் வேண்டிக் கொள்ளும் செல்வங்களை பாவனையாக இடும்போது, அது கோடிக்கணக்கில் நமக்குப் பிரதிபலனை அளிக்கிறது. இது அழிவு ஆகாது; வீணாக்குவதும் ஆகாது” என்று சொன்னார்.

எத்தனையோ மகான்கள் இந்த ஞான பூமியில்
அத்தனை பேருக்கும் நமது வணக்கங்கள்