ராமர் கோயில் பற்றி சர்ச்சை கருத்து: டெல்லி வீட்டை காலி செய்ய மணிசங்கர் அய்யருக்கு நோட்டீஸ்

காங்கிரஸ் மூத்த தலைவர் மணி சங்கர் அய்யர், அவரது மகள் சுரண்யா அய்யர் டெல்லியின் ஜாங்புரா பகுதியில் வசித்து வருகின்றனர். கடந்த ஜனவரி 20-ம் தேதி சுரண்யா அய்யர் தனது முகநூல் பக்கத்தில், “ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவும் முஸ்லிம்களுக்கு ஆதரவு அளிக்கவும் விரதம் மேற்கொள்கிறேன்” என பதிவிட்டிருந்தார்.
ராமர் கோயில் ஜனவரி 22-ம் தேதி திறக்கப்பட்டது. அதற்கு 2 நாள் முன்பு இந்தப் பதிவு வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், ஜாங்புரா குடியிருப்போர் நலச்சங்கம் மணி சங்கர் அய்யர் மற்றும் சுரண்யா அய்யருக்கு ஒரு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அதில் “குடியிருப்புவாசிகளின் மத உணர்வுகளுக்கு எதிராக அமைதியை சீர்குலைக்கும் வகையில் ஒருவர் கருத்து தெரிவிப்பதை ஏற்க முடியாது.
ராமர் கோயிலுக்கு எதிராக நீங்கள் செய்த செயல் சரிதான் என கருதினால். இந்த குடியிருப்பை காலி செய்துவிட்டு. இதுபோன்ற வெறுப்பு பேச்சை சகித்துக் கொள்ளும் மக்கள் வசிக்கும் பகுதியில் குடியேறுங்கள். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பிறகு ராமர் கோயில் கட்டப்படுகிறது என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது