ராமஜென்ம பூமி அறக்கட்டளை வழிகாட்டுதலுடன் இலங்கையில் ‘ராமாயண பாதை யாத்திரை திட்டம்’

ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்திரஅறக்கட்டளையின் வழிகாட்டுதலுடன், இலங்கையில் ராமாயணத்துடன் தொடர்புடைய இடங்களைப்பிரபலப்படுத்த ‘ராமாயண பாதையாத்திரைத் திட்டம்’ தொடங்கப்பட்டுள்ளது.

அயோத்தியில் பிறந்த ராமர், விதேக நாட்டின் (நேபாளம்) மன்னன் ஜனகனுக்கு மகளாகப் பிறந்த சீதையை மணம் முடித்தார். இலங்கை மன்னனான ராவணன் சீதையை இலங்கைக்கு் கடத்திச் செல்கிறார். இதனால் ராமாயண கதை இந்தியா, நேபாளம், இலங்கை என 3 நாடுகளில் பயணிப்பதுடன், மூன்று நாடுகளின் கலாச்சார உறவுகளையும் கொண்டது. இந்திய–இலங்கை ஆன்மிகமற்றும் கலாச்சார நட்புறவை வளர்ப்பதற்காகவும், இலங்கையில் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காகவும் அந்நாட்டில் ராமாயணத்துடன் தொடர்புடைய இடங்களைப் பிரபலப்படுத்த ‘ராமாயண பாதை யாத்திரைத் திட்டம் இந்தியாவில் உள்ள ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளை வழிகாட்டுதலுடன் தொடங்கப்பட்டுள்ளது.

ராமாயண பாதை யாத்திரைத் திட்டத்துக்கு இலங்கையில் தலைமன்னார் ராமர் பாலம், சீதாஎலிய அசோகவனம், காலி ரூமஸ்ஸல, திருக்கோணேஸ்வரம் சிவன் கோயில், புத்தளம் மானாவரி சிவன்கோயில், வெலிமடை திவுரும்பொல, உஸ்ஸன்கொட தேசிய சரணாலயம், எல்ல இராவணன் குகை, கதிர்காமம் முருகன் கோயில்ஆகிய 9 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, யாத்திரை மற்றும் சுற்றுலாப் பயணத்துக்காக பிரபலப்படுத்தப்படும்.

திட்டத்துக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள 9 இடங்கள்

இந்த 9 இடங்களுக்குப் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் செல்வதற்கு வாய்ப்புக் கிடைப்பதுடன், அந்த இடங்கள் தொடர்புடைய பண்டைய ஆன்மிக நிகழ்வுகளை ஏ.ஐ. செயற்கை நுண்ணறிவு, விர்ச்சுவல் உள்ளிட்ட நவீனத் தொழில்நுட்பங்களின் மூலம் புதிய அனுபவத்தை அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த ராமாயண பாதை யாத்திரைத் திட்டத்தின் அறிமுக நிகழ்ச்சி,கொழும்புவில் உள்ள தாஜ் சமுத்திரா ஹோட்டலில் நடைபெற்றது. இதில், ராமஜென்ம பூமி தீர்த்தஷேத்திர அறக்கட்டளை பொருளாளர் சுவாமி கோவிந்த் தேவ் கிரி, இலங்கை அதிபரின் ஆலோசகர் சாகல ரத்நாயக்க, முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய, இலங்கைக்கான இந்திய தூதர் சந்தோஷ் ஜா, கிரிக்கெட் வீரர் சனத் ஜெயசூரிய உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த திட்டம் ரூ.5 கோடியில் தொடங்கப்பட உள்ளது.