மேற்கு வங்க அமைச்சர் கைது

மேற்குவங்கத்தின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சராக இருப்பவர் பார்த்தா சட்டர்ஜி. இவர் இதற்கு முன் அம்மாநிலத்தின் கல்வித்துறை அமைச்சராக இருந்தார். அந்த காலகட்டத்தில் அம்மாநிலத்தில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் நியமணத்தில் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. அம்மாநிலத்தில் தற்போது கல்வித்துறை அமைச்சராக உள்ளவர் பரீஷ் சந்திர அதிகாரி. இவரது மகள் அங்கிதா அதிகாரி. அம்மாநில அரசுப்பள்ளியில் அங்கிதா அதிகாரி கடந்த 2018ம் ஆண்டு ஆசிரியையாக நியமிக்கப்பட்டார். ஆசிரியர் தேர்வில் தன்னைவிட குறைவான மதிப்பெண் எடுத்த அங்கிதா அதிகாரிக்கு ஆசிரியர் பணி வழங்கப்பட்டுள்ளதாகவும் ஆசிரியர் தேர்வில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் ஒருவர் மனு தாக்கல் செய்தார். இம்மனுவை விசாரித்த நீதிமன்றம், ஆசிரியர் பணியில் இருந்து அங்கிதாவை நீக்கியது. மேலும், அவர் ஆசிரியராக நியமிக்கப்பட்டது முதல் வாங்கிய சம்பளத்தை முழுவதும் திரும்ப ஒப்படைக்குமாறு உத்தரவு பிறப்பித்தது. மேலும், மேற்கு வங்க ஆசிரியர் நியமணம் மற்றும் அதில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக விசாரிக்க சி.பி.ஐக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த விவகாரத்தில் பணமோசடிகள் நடைபெற்றுள்ளதாக புகார்கள் எழுந்ததால் அமலாக்கத்துறையும் தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளது. இது சம்பந்தமாக அமைச்சர் பார்த்தா சட்டர்ஜி, பரீஷ் சந்திர அதிகாரி தொடர்புடைய இடங்கள் மற்றும் மாநில கல்வித்துறையில் முக்கிய பொறுப்புகளில் உள்ள அதிகாரிகளின் வீடுகள் என 13 இடங்களில் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் போது பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது. சோதனையின் போது பார்த்தா சட்டர்ஜியிடம் 11 மணி நேரம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தினர். இதனையடுத்து பார்த்தா சட்டர்ஜி நேற்று கைது செய்யப்பட்டார். இந்நிலையில், அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் பார்த்தா சட்டர்ஜியின் உதவியாளர் அர்பிதா பானர்ஜியின் வீட்டில் இருந்து கட்டுக்கட்டாக 20 கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. அர்பிதா பானர்ஜி வங்காளம், ஒடிசா ஆகிய மொழிப்படங்களில் நடத்துள்ளார். அவர் தமிழ் படம் ஒன்றிலும் நடத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் மேற்குவங்க அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.