மீனவர்களின் பிரச்னைகளை முடித்து கொடுப்பேன்: கவர்னர் ஆர்.என்.ரவி உத்தரவாதம்

மீனவர்களின் பிரச்னைகள் அனைத்தையும் முடித்துக் கொடுப்பேன் என தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி உறுதி அளித்துள்ளார். உலக மீனவர் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடியில் நடந்த விழாவில் தமிழக கவர்னர் ஆர்என்.ரவி பேசியதாவது: ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ்., போன்ற உயர் பதவிகளுக்கு மீனவர்கள் வர வேண்டும். கடலோர காவல் படையில் மீனவ இளைஞர்களை சேர்க்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இரண்டு மாதத்திற்கு முன்பு மீனவர்களிடம் அவர்கள் பிரச்னை குறித்து கேட்டறிந்தேன். மீனவர்களின் குறையை மத்திய மாநில அரசுகளிடம் சமர்ப்பித்தேன். நான் உங்களுக்கு (மீனவர்கள்) நம்பிக்கை தெரிவிக்கின்றேன். மீனவர்களின் பிரச்னைகள் அனைத்தையும் நான் முடித்துக் கொடுப்பேன்.

 

மீனவர்கள், நாட்டை பாதுகாப்பதிலும், நாட்டின் வளர்ச்சியிலும் முக்கிய பங்கு வகிக்கின்றனர். மீனவர்கள் தங்கள் உயிரை பணயம் வைத்து மீன் பிடிக்க செல்கின்றனர். மீனவர்களுக்கு நல்ல ஆரோக்கியம், கிடைக்க கடவுள் ஆசீர்வதிக்க வேண்டும். தேசத்தின் பாதுகாப்பில் மீனவர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். நமது இந்திய தேசம் பெரிய கடல் எல்லையை கொண்டதாக இருக்கிறது. மரைன் போலீசில் மீனவ இளைஞர்கள் பங்கு பெற வேண்டும். ஏனென்றால் கடலை பாதுகாப்பது அனைவராலும் முடியாது. கூடிய விரைவில் கடல் பாதுகாப்புப் படையில் மீனவ இளைஞர்களை அதிகம் சேர்க்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும். மீனவ சமுதாயம் பின்னடைவில் இருக்கிறது. மீனவர்களுக்கு இன்னும் பல திட்டங்கள் கொண்டு வரப்படும். இவ்வாறு கவர்னர் பேசினார்.