மா மனிதர்களை உருவாக்கும் சித்பவானந்தம்

சங்கமமும் சுவாமிஜியும்

தமிழகத்தில் ௧௯௬௦–௭௦ களில் ஆரிய திராவிட வாதமும் நாத்திகவாதமும் தலைவிரித்தாடிய காலகட்டத்தில், திருப்பராய்த்துறையில் ராமகிருஷ்ண தபோவனத்தை நிறுவி, கல்வி  நிறுவனங்கள்  மூலம் இளைஞர்களுக்கு பக்தி உணர்வை ஊட்டியவர் சுவாமி சித்பவானந்தர். ௧௯௮௩–ம் ஆண்டு ஸ்ரீரங்கத்தில் நடந்த ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் கூட்டத்தில் வழங்கிய சுவாமிஜி, “நாம் அனைவரும் சுவாமி விவேகானந்தரின் கருத்துக்களுக்காக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சங்க நிகழ்ச்சிகளுக்காக எப்ெபாழுது வேண்டுமானாலும் தபோவன நிறுவனங்களைப் பயன்படுத்திக் ெகாள்ளலாம். இது உங்கள் தாய்வீடு” என்று குறிப்பிட்டார்.

கைக்குத்தல் அரிசி,  மால்ட்

சுவாமி சித்பவானந்தர், தான் துவக்கிய ஆஸ்ரமங்களிலும் பள்ளி, கல்லூரி விடுதிகளிலும் கைக்குத்தல் அரிசியை உபயோகித்தார். வெள்ளை வெளேர் என்று சாதம் சாப்பிட்டு பழகிய மாணவர்களுக்கு ஆரம்பத்தில் கைக்குத்தல் அரிசி சற்று கடினமாகத்தான் இருந்தது. அந்த அரிசியின் உணவு உடலுக்கு மிகுந்த ஆரோக்கியமானது என்பது தெரிந்தபிறகு, அனைவரும் விரும்பி அருந்தினர். மேலும், காபி, தேநீர் முதலிய பானங்களுக்குப் பதிலாக ராகி (கேழ்வரகு) சோளம், கம்பு போன்ற தானியங்கள் மூலமாக தயாரிக்கப்பட்ட மால்ட் (சத்துமாவுப் பானம்) வழங்கப்பட்டது. உணவு பரிமாறி முடியும் வரை நாமாவளி சொல்வதும் பரிமாறி முடிந்தவுடன் கடவுளுக்கு அர்ப்பண மந்திரம் சொல்லி உணவருந்தும் பழக்கத்தையும் ஏற்படுத்தினார்.

பூஜையறை – சமையலறை – கழிவறை

பூஜையறை, சமையலறை, கழிவறை மூன்றுக்கும் சமமான முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பார் சுவாமிஜி. தானே கழிவறைகளைச் சுத்தம் செய்ததன் மூலம் மாணவர்களுக்கு உதாரணமாகத் திகழ்ந்தார்.

 சக்தி ஒன்றே பேசும்

விசுவ ஹிந்து பரிஷத் சார்பில் ஞானவேல் ரதம் தமிழ்நாடு முழுவதும் பவனி வந்தது. அது திருச்சி மாவட்டம் புத்தாநத்தம் வந்தபோது முஸ்லிம்கள் எதிர்ப்புத் தெரிவித்தார்கள். பெரிய கலவரமே உருவாகியது. இது பற்றி சுவாமிஜியிடம் தெரிவித்தபோது “ஊர்வலத்தில் ஹிந்துக்கள் எண்ணிக்கை 50 பேர் இருந்தால் எதிர்ப்பு வரத்தான் செய்யும். காவல்துறையும் ஒன்றும் செய்ய இயலாது. அதற்குப் பதிலாக 5000 ஹிந்துக்கள் கலந்து கொண்டால் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் ஊர்வலம் நடைபெறும். காவல்துறையும் ஒத்துழைப்பு கொடுப்பார்கள். சக்தி தனக்குத் தானே பேசிக்கொள்ளும்” என்று தெரிவித்தார். சுவாமிஜி கூறியவாறே அடுத்த ஆண்டு 5,000 ஹிந்துக்கள் திரண்டபோது ஊர்வலம் எந்த பிரச்சினையும் இல்லாமல் நடைபெற்றது. இப்போதும் மாட்டுப் பொங்கலன்று தொடர்ந்து ஊர்வலம் நடைபெற்று வருகிறது.

 முதலமைச்சரே என்றாலும்…

சேலம் ஸ்ரீ சாரதா கல்லூரியில் ஒரு நிகழ்ச்சி சுவாமி சித்பவானந்தர் தலைமையில் ஏற்பாடாகியிருந்தது. அதில் சிறப்பு விருந்தினராக அன்றைய முதலமைச்சர் எம்.ஜி. ராமச்சந்திரன் கலந்து கொள்வதாக இருந்தது. முதலமைச்சர் வர அரை மணி நேரம் தாமதமாகும் என்று செய்தி வந்தது. ஆனால் சுவாமிஜி முதலமைச்சருக்காக காத்திருக்கவில்லை. நிகழ்ச்சியைத் துவக்கச் சொன்னார். முதலமைச்சர் அரைமணி நேரம் தாமதமாக வந்ததற்கு மன்னிப்பு கேட்டு சுவாமிஜியை விழுந்து வணங்கினார். எவ்வளவு பெரிய பதவி, எவ்வளவு பெரிய மனிதராக இருந்தாலும் நேரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதில் சுவாமிஜி உறுதியாக இருந்தார்.

டெல்லிக்கு ராஜாவானாலும்…

சுவாமிஜியின் அண்ணன் மகனும் முன்னாள் மத்திய அமைச்சரும் அப்போதைய நாடாளுமன்ற வேட்பாளருமான மறைந்த சி. சுப்பிரமணியம் கூட்டணி கட்சித் தலைவர்கள் புடைசூழ, தபோவனத்திற்குள் நுழைந்ததை சுவாமிஜி பார்த்துவிட்டார். சி. சுப்பிரமணியனிடம் முதலில் உனது படை, பரிவாரங்களை வெளியே அனுப்பிவிட்டு தனியே இங்கு வரலாம்” என்றார். உடனே சி.எஸ். அனைவரையும் வெளியே அனுப்பிவிட்டு தனி ஆளாக மாடிக்கு வந்து சுவாமிஜியிடம் ஆசி பெற்றார்.

முற்றும் துறந்தவர்களுக்கு அரசனும் ஆண்டியும் ஒன்றுதான் என்பது புரிந்தது.