புரட்சிகர தேர்தல் சீர்திருத்தங்கள்

தேர்தல் ஆணையத்தின் ஆலோசனைப்படி, தேர்தல் சட்ட திருத்த சட்டத்தின் நான்கு முக்கிய அம்சங்களை மத்திய அரசு செயல்பாட்டிற்கு கொண்டுவந்துள்ளது. அதன்படி, ஒருவரின் பெயர் பல இடங்களில் வாக்காளர் பட்டியலில் இடம் பெறுவது, போலி வாக்காளர்கள் போன்ற முறைகேடுகளைத் தடுக்கும் வகையில், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் இணைக்கப்படவுள்ளது. இனி, ஆண்டுதோறும் ஏப்ரல் 1 ஜூலை 1, அக்டோபர் 1 ஆகிய தேதிகளில், 18 வயது பூர்த்தியானவர்கள் புதிய வாக்காளர்களாக பதிவு செய்து கொள்ளும் நடைமுறை அறிமுகமாகிறது. வெளிநாடுகளில் உள்ள பாரத துாதரகங்களில் பணியாற்றுவோர், எல்லைகளில் காவல் காக்கும் ராணுவ வீரர்கள் ஆகியோர் சேவைப் பிரிவு வாக்காளர்களாக கருதப்படுவர். சேவைப் பிரிவினரில் கணவன் அல்லது மனைவி சார்பில் பரஸ்பரம் ஓட்டு போட முடியும். வாக்களிப்பதில் பாலின சமத்துவ உரிமையை அளிக்க, மனைவி என்ற சொல்லுக்கு பதிலாக துணைவர் என்ற சொல் பயன்படுத்தப்படும். தேர்தல் தொடர்பான சாதனங்கள், ஆவணங்கள் ஆகியவற்றை வைக்கவும், பாதுகாப்பு படையினர் தங்கவும் எந்த இடத்தையும் தேர்தல் கமிஷன் கோரமுடியும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.