பிஹாரில் ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸில் இருந்து மேலும் 4 எம்எல்ஏ.க்கள் என்டிஏ.க்கு வருவார்கள்: ஜிதன் ராம் மாஞ்சி

பிஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான என்டிஏ அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு மாநில சட்டப்பேரவையில் கடந்த 12-ம் தேதி நடைபெற்றது.
அப்போது ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) கட்சியை சேர்ந்த சேத்தன் ஆனந்த், நீலம் தேவி, பிரகலாத் யாதவ் ஆகிய 3 எம்எல்ஏக்கள் கட்சி மாறி, நிதிஷ் குமார் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இந்நிலையில், முன்னாள் முதல்வரும் ஹிந்துஸ்தான் அவாமி மோர்ச்சா (எச்ஏஎம்) தலைவருமான ஜிதன் ராம் மாஞ்சி நேற்று கூறும்போது, “ஓர் ஆட்டம் முடிந்து விட்டது. இன்னொரு ஆட்டம் இனிமேல்தான் தொடங்கவுள்ளது. மேலும் 4 எம்எல்ஏக்கள், அதாவது ஆர்ஜேடி மற்றும் காங்கிரஸில் இருந்து தலா 2 எம்எல்ஏ.க்கள் ஆளும் என்டிஏ.வில் இணையஉள்ளனர்” என்றார்.
ஜிதன் ராம் மாஞ்சி மேலும் கூறும்போது, “நிதிஷ் குமார் ஒரு நல்ல காரியமாக என்டிஏ.வில் இணைந்தார். முன்னதாக அவர் தடுமாற்றத்தில் இருந்தார். மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருவதை அவர் சுட்டிக்காட்டினார். எனவே தான் அவர் என்டிஏ.வுக்கு திரும்பினார். பிஹார் மக்களின் நலனுக்காக அவர் இதனை செய்துள்ளார்” என்றார். பாஜக கூட்டணிக்கு எதிராக இண்டியா கூட்டணியை உருவாக்குவதில் நிதிஷ் குமார்முக்கியப் பங்காற்றினார். எனினும்இதன் ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு அவரது பெயர் அறிவிக்கப்படாததால் அவர் அதிருப்திஅடைந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து கடந்த ஜனவரியில்இண்டியா கூட்டணியில் இருந்து வெளியேறினார்.
மேலும் பிஹார் முதல்வர் பதவியிலிருந்தும் விலகிய அவர், பாஜக, எச்ஏஎம் ஆகிய என்டிஏ கட்சிகளின் ஆதரவுடன் புதிய ஆட்சி அமைத்துள்ளார்.