பாரதியின் குரு உபதேசம்

சீடனின் தகுதி பார்த்து உபதேசம் செய்ய வேண்டும் என்பதால் ‘குரு உபதேசத்தை மற்றவர்களுக்குச் சொல்லக்  கூடாது’ என்பார்கள்.  முதலில் இராமானுஜர் அந்த விதியை  உடைத்தார். தான் அறிந்த உண்மையை கோயில் கோபுரத்தில் ஏறி ஊருக்கே உபதேசம்  செய்தார்.  அடுத்து பாரதியார், குள்ள சாமியாரிடம் தான் பெற்ற உபதேசத்தை ஊருக்கே சொன்னார், அது. தேசிகன்கை காட்டியெனக் குரைத்த செய்தி செந்தமிழில் உலகத்தார்க் குணர்த்துகின்றேன். தேசிகன் காட்டி எனக்கு உரைத்த செய்தியை செந்தமிழில் உலகத்தார் உணரும் படி சொல்கின்றேன். “வாசியைநீ கும்பத்தால் வலியக் கட்டி, மண்போலே சுவர்போலே வாழ்தல் வேண்டும். மண் இயற்கையானது. மண்ணைச் சேர்த்து குழைத்துக் கட்டிய சுவர் செயற்கையானது.  மண் என்றும் இருக்கும். சுவர் இன்று இருக்கும், நாளை போகும். என்றும் , எப்போதும் சாஸ்வதமாக உள்ள ஒன்றைப் பிடி. தேசுடைய பரிதியுருக் கிணற்றினுள்ளே தெரிவது போல் உனக்குள்ளே சிவனைக் காண்பாய். அருகில் செல்லமுடியாத சக்தி வாய்ந்த சூரியனின் பிம்பத்தை கிணற்றுக்குள் பார்ப்பது போல உனக்குள்ளே சிவனை காண்பாய். கிணற்று நீர் போல நம் உள்ளம் சலனம் இல்லாமல்  இருந்தால், நம் உள்ளத்திலும் சிவன்  தெரியும்.
பேசுவதில் பயனில்லை,அனுபவத்தால் பேரின்பம் எய்துவதே ஞானம்”என்றான். பேசிக் கொண்டே இருக்கிறோம். பேசுவதைக் கேட்டுக் கொண்டே இருக்கிறோம். நமக்குள் நாமே பேசிக் கொண்டிருக்கிறோம். பேச்சு நிற்க வேண்டும். கேள்விகள் நிற்க வேண்டும். மௌனம் வர வேண்டும். அனுபவத்தால் அறிய வேண்டும். அதுவே ஞானம் என்கிறார் பாரதி.
மகாகவி பாரதியாரின் பிறந்த தினம் இன்று