பக்க சார்புடைய காட்சி ஊடகங்கள்

ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் நடந்த கல்வி நிகழ்ச்சி ஒன்றில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா கலந்து கொண்டு பேசுகையில், “நாட்டில் அச்சு ஊடங்களாவது ஓரளவு பொறுப்புடன் செயல்படுகின்றன. காட்சி ஊடகங்களில் நடக்கும் தொலைக்காட்சி விவாதங்கள் பலவும் பக்க சார்புடையதாக, அரைகுறை தகவலுடையதாக, ஏதேனும் உள்நோக்கம் கொண்டதாகவே இருக்கின்றன. காட்சி ஊடகங்களுக்கு பொறுப்பே இல்லை. சமூக ஊடகங்கள் இன்னும் மோசம். காட்சி ஊடகங்கள் எல்லைமீறிச் செல்வதாலும், பொறுப்பை உணராமல் செயல்படுவதாலும் ஜனநாயகத்தை பின்நோக்கி இழுத்துச் செல்கிறது. ஊடகங்கள் தனக்குத்தானே வரம்புகளை வகுத்துச் செயல்பட வேண்டும். பொறுப்புடன் செயல்பட வேண்டும். காட்சி ஊடகங்கள் தங்களின் சக்தியை மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தேசத்திற்கு புதிய சக்தியை பாய்ச்சவும் பயன்படுத்த வேண்டும். தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகள், சமூக ஊடக அலசல்கள் எல்லாம் கட்டப்பஞ்சாயத்தை போல நடக்கின்றன. அதிநவீன ஊடக அங்கங்களின் வீச்சு அதிகம். ஆனால், அவற்றால் எது சரி எது தவறு எனத் தெரிந்துகொள்ள இயலவில்லை. ஊடகங்களில் எது ட்ரெண்டாகிறதோ அதை வைத்து ஒரு வழக்கின் போக்கை தீர்மானிக்க இயலாது. சமூக ஊடகங்களில் சில நேரங்களில் நீதிபதிகளுக்கு எதிரான பிரச்சாரங்கள் கட்டமைக்கப்படுகின்றன. நீதிபதிகள் ஒரு சம்பவம் குறித்து உடனடியாக எதிர்வினையாற்றாமல் இருக்கலாம். அவ்வாறு எதிர்வினையாற்றாததால் அவர்கள் பலமில்லாதவர்கள், கையாளாகாதவர்கள் என்று அர்த்தமில்லை” என்று தெரிவித்தார்.