நாட்டின் பாரம்பரியம், கலாச்சாரம் குறித்து மக்களுக்கு நினைவூட்டவே காசி, சவுராஷ்டிரா சங்கமம்: ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்து

காசி தமிழ்சங்கமம் 2.0-வில் பங்கேற்ற தன்னார்வலர்கள் மற்றும் அமைப்பாளர்களுக்கு பாராட்டு விழா சென்னை, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், நடைபெற்றது. இதில், ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று பேசியதாவது: நாட்டின் பாரம்பரியம், கலாச்சாரம் குறித்து மக்களுக்கு நினைவுபடுத்தும் வகையில் காசி சங்கமம், சவுராஷ்டிரா சங்கமம் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இத்தகைய நிகழ்ச்சிகள் மூலம் முந்தைய கலாச்சார நிகழ்வுகள் அனைத்தையும் பிரதமர் மோடி உயிர்தெழ வைத்து வருகிறார்.
நாட்டின் பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் பேணி காக்க வேண்டும். பாரதம் என்பது ரிஷிகளாலும், முனிவர்களாலும் உருவானது. தமிழகம் சிறந்த கலாச்சாரம், பண்பாடு கொண்ட மாநிலம். தமிழர்கள் பல ஆண்டு களுக்கு முன்பே காசியில் வசித்து வந்துள்ளனர். காசிக்கும், தமிழகத்துக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. இவ்வாறு ஆளுநர் ரவி கூறினார்.