நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப லஞ்சம்: திரிணமூல் எம்.பி. மீதான புகார் நெறிமுறை குழுவுக்கு பரிந்துரை

மக்களவை சபாநாயகருக்கு பாஜக எம்.பி நிஷிகாந்த் துபே ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது

எரிசக்தி மற்றும் கட்டமைப்பு தொடர்பான ஒப்பந்தத்தை ஹிராநந்தனி குழுமம், அதானி குழுமத்திடம் இழந்தது. கடந்த 2019 முதல் 2023 வரை திரிணமூல் எம்.பி. மகுவா மொய்த்ரா நாடாளுமன்றத்தில் எழுப்பிய 61 கேள்விகளில் 50 கேள்விகள் தொழிலதிபர் ஹிராநந்தனி குழுமத்தின் தர்ஷன் உத்தரவின் பேரில் கேட்கப்பட்ட கேள்விகள்.

இதற்கு பிரதிபலனாக தர்ஷன் ஹிராநந்தனி. எம்.பி மகுவா மொய்த்ராவுக்கு ரூ.2 கோடிக்கு காசோலை வழங்கினார். மேலும் விலையுயர்ந்த ஐபோன் உட்பட பல பரிசு பொருட்களையும் வழங்கினார். மகுவா மொய்த்ரா தேர்தலில் போட்டியிட்டபோது ரூ.75 லட்சத்துக்கு காசோலையை தர்ஷன் வழங்கினார். இதை வழக்கறிஞர் ஜெய் ஆனந்த் தொகாத்ராய் கண்டுபிடித்துள்ளார். இது தொடர்பாக அவர் சிபிஐயிடம் புகார் தெரிவித்துள்ளார். இவ்வாறு அவர் கூறியிருந்தார். இந்தப் புகார் மக்களவை நெறிமுறைக் குழுவுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மகுவா மொய்த்ரா கூறும்போது, ‘‘போலி பட்டம் பெற்றவர்கள் உட்பட பல உரிமை மீறல் பிரச்சினைகள் நிலுவையில் உள்ளன. அந்தப் பிரச்சினைகளை எல்லாம் முடித்து விட்டு எனக்கு எதிராக தீர்மானம் கொண்டுவரப்பட்டால் அதை வரவேற்கிறேன்’’ என்றார்.