தேவசகாயத்திற்கு புனிதர் பட்டமா?

விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் அகில பாரத இணைப் பொதுச் செயலாளர் கோ.ஸ்தாணுமாலயன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“தேவசகாயம் பிள்ளைக்கு புனிதர் பட்டம் வழங்கக்கூடாது. கன்னியாகுமரி மாவட்டத்தில் மதம் மாறிய காரணத்திற்காகவும், தீண்டாமையை எதிர்த்தமைக்காகவும், கிறிஸ்தவத்தைப் பரப்பியதற்காகவும் நட்டாலம் நீலகண்ட பிள்ளை என்ற தேவசகாயம் பிள்ளையை ஹிந்து மன்னர் சுட்டுக்கொன்றார் என்று கூறி தேவசகாயம் பிள்ளைக்கு 2022 மே 15ம் நாள் புனிதர் பட்டத்தை போப் பிரான்ஸிஸ் வழங்கப்போவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கிறிஸ்தவர்கள் யாருக்கு வேண்டுமென்றாலும் புனிதர் பட்டம் வழங்கலாம், அது அவர்களது உரிமை. ஆனால், மதமாற்றம் செய்ததற்காக தேவசகாயம் பிள்ளை சுட்டுக்கொல்லப்பட்டார் என்று ஆதாரமற்ற புனைவை வரலாறாக நிறுவ முயன்று இந்தப் புனிதர் பட்டமளிப்பு நடைபெறுவது முழு ஹிந்து சமுதாயத்தையும் குறிப்பாக திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ஹிந்துக்களையும் அவமதிக்கும் செயல்.

திருவிதாங்கூர் வரலாற்று புத்தகங்களிலும் குறிப்பாக நாகம் ஐயாவின் திருவிதாங்கூர் வரலாற்றிலும், கிறிஸ்தவ புத்தகங்களிலும் இது ஆதாரமற்ற புனைவு என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தேவசகாயம் பிள்ளை 1752ல் கொல்லப்பட்டார் என்று கத்தோலிக்க வரலாறு சொல்கிறது. ஆனால், 1774ல் கிறிஸ்தவர்களுக்குப் பேருதவி செய்தது திருவிதாங்கூர் என்று போப் க்ளமெண்ட் – 14 கடிதம் எழுதியுள்ளார். கிறிஸ்தவர்களுக்கு எதிராக எந்த அடக்குமுறையும் நடக்கவில்லை என்பதற்கு இதுவே சான்று.

தேவசகாயம் பிள்ளைக்குப் புனிதர் பட்டம் கொடுப்பதற்கான காரணங்களை விவரிக்கும் கிறிஸ்தவ வலைத்தளங்களில் தேவசகாயம் பிள்ளைக்கு புனிதர் பட்டம் கொடுப்பதன் வாயிலாக தென்தமிழகம், தெற்கு கேரளம், வடக்கு இலங்கைப் பகுதிகளில் கிறிஸ்தவம் வளரும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கிறிஸ்தவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி நாகலாந்து, மிசோரம் பகுதிகள் போல் பாரதத்தின் தென் பகுதிகளையும் கிறிஸ்தவ ஆதிக்கம் நிறைந்த பிரதேசமாக உருவாக்க முயற்சி நடப்பதாகத் தெரிகிறது.

மதமாற்றத்தை ஊக்குவிக்கும் விதமாக திருவள்ளுவர் கிறிஸ்தவர் என்றும், திருக்குறள் கிறிஸ்தவ நூல் என்றும் சைவமும்,வைணவமும் கிறிஸ்தவத்திலிருந்து தோன்றியது என்றும் போலி வரலாற்றை உருவாக்கியது போல, போலியாக தேவசகாயம் பிள்ளை வரலாற்றை புனைந்து அதன் வாயிலாக புனிதர் பட்டம் கொடுக்கும் செயலைக் கண்டிக்கிறோம்.

கட்டுக்கதைகளை வரலாறாகச் சித்தரிக்கும் கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் செயல் தமிழகத்தில் மதக்கலவரத்தை தூண்டும் செயலாக அமையும் என்று அஞ்சுகிறோம். இந்த சதிச்செயலை மத்திய மாநில அரசுகளும், தேசியவாதிகளும் சமூக அக்கறை உள்ள வரலாற்று ஆய்வாளர்களும் உணர்ந்து செயல்படவேண்டும்.  இது போன்ற தேசவிரோத, ஹிந்து விரோத பொய் சரித்திரங்களை உருவாக்கக் கூடிய திட்டங்களை எதிர்த்து மக்களைத் திரட்டி உண்மையான வரலாற்றை பாதுகாக்க விஷ்வ ஹிந்து பரிஷத் தொடர்ந்துப் போராடும்” என தெரிவிக்கப்பட்டு உள்ளது.