தேர்தல் கமிஷனர்கள் நியமன சட்டத்துக்கு தடை விதிக்க மறுப்பு

புதுடில்லி தலைமை தேர்தல் கமிஷனர் மற்றும் தேர்தல் கமிஷனர்கள் நியமனம் தொடர்பான புதிய சட்டத்தை செயல்படுத்த தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது. தலைமை தேர்தல் கமிஷனர் மற்றும் தேர்தல் கமிஷனர்கள் நியமனம் தொடர்பாக, கடந்தாண்டு மத்திய அரசு புதிய சட்டத்தை அறிமுகம் செய்தது.

இதன்படி, இவர்களை தேர்வு செய்யும் குழுவில், பிரதமர் தலைவராகவும், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் பிரதமரால் நியமிக்கப்படும் மத்திய அமைச்சர் உறுப்பினர்களாக இருப்பர். இந்த குழுவில் ஏற்கனவே இடம் பெற்றிருந்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, புதிய சட்டத்தில் இடம் பெறவில்லை.

இந்த சட்டத்துக்கு எதிராக, ஜனநாயக சீர்திருத்தத்துக்கான சங்கம் என்ற அரசு சாரா அமைப்பு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனு, நீதிபதிகள் சஞ்சிவ் கண்ணா, திபாங்கர் தத்தா அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷண் வாதிடுகையில், இரண்டு தேர்தல் கமிஷனர்கள் விரைவில் ஓய்வு பெற உள்ளனர். அதனால், இந்த சட்டத்தை அமல்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று குறிப்பிட்டார். ஆனால், அதை ஏற்க மறுத்த அமர்வு, தடை விதிக்க முடியாது என்று கூறியுள்ளது. இது தொடர்பான மற்ற வழக்குகளுடன் இணைந்து, ஏப்.,ல் விசாரிப்பதாக கூறியுள்ளது.