திருவெம்பாவை 8

அதிகாலையில் கோழி கூவுவது “உறங்கும் நம்மை எழுப்பத்தான்”. அதற்காகவே காத்துக் கிடந்த மற்ற பறவை இனங்களும் ஒலி எழுப்புகின்றன. இசைக் கருவிகள் ஒலி எழுப்ப, அவற்றுடன் வெண்சங்கின் ஒலியும் சேர்ந்து ஒலிக்கிறது. ஒப்புமை இல்லாத பேரொளியாகவும், ஒப்புமை இல்லாத கருணை உடையவனாகவும், பிற பொருட்களுடன்  உவமை காட்ட  இயலாதவண்ணம் சிறந்த பொருளாக நம் இறைவன் நிற்கிறான். அது குறித்து நாங்கள் இப்போது பாடினோம். இந்த ஓசைகளும், நாங்கள் நெக்குருகி இறையைத்  துதித்துப் பாடுவதும் உனக்குக்  கேட்கவில்லையோ?

ஆழிக் கடலில் தூங்கிக் கொண்டிருந்தாலும் அத்தன் சிவனையே மனதில் நிறுத்தித் துதிக்கும் திருமாலின் அன்பு இவ்வாறானதா? உனக்கு ஏன் இந்த உறக்கம்?, எழுந்து, வாய் திறந்து, உலகின் முதல்வனாய், ஏழைகளின் துன்பங்களில் பங்கு கொண்டு, துன்பங்கள் துடைக்கும் சிவனைப் பாடுவோம். பனிபடர்ந்த இருள் சூழ்ந்த மார்கழி காலையை சூரியன் பிரகாசமாக்குவதைபோல, ஆணவம், பொறாமை, அறியாமை ஆகிய இருள் சூழ்ந்த மனதை சிவபெருமான் ஒளி வெள்ளமாக்குகிறார். ஐந்தறிவு உயிரினங்கள் கூடத் தங்களின் இயல்பு மாறாமல் தத்தம் கடமைகளைச் செய்கின்றன ஆனால் இறைவனை உணர்வதற்காக புத்தி போன்றவற்றை பெற்ற மனிதன் அதனைப் பயன்படுத்தாது மாயை என்னும் வலைக்குள் ஆழ்ந்து கிடக்கிறான் என்கின்ற கருத்தை உணர்கிறோம்.

ஆர். கிருஷ்ணமூர்த்தி