திருவெம்பாவை 10

தீய பண்புகள் இல்லாத குலத்தில் உதித்தவர்களும், சிவபெருமானின் திருக்கோயில் திருப்பணியையே சொந்தமாக்கிக் கொண்டவர்களுமான பெண்களே! அரியும் அயனும் அடி முடி காணமுடியா அனற்பிழம்பாக, திருவண்ணாமலையாக, லிங்கோத்பவராக நிற்கின்றான். நம் தலைவனாகிய அவனது வீரக் கழலணிந்த திருவடி மலர்ப் பாதங்கள் பாதாளம் ஏழுக்கும் கீழே சொற்களைக் கடந்த எல்லையில் உள்ளன. கொன்றை, ஊமத்தை போன்ற மலர்களும், சந்திரன், கங்கை போன்றவற்றை அணிந்த அவரது திருமுடியானது வானத்தின் எல்லைகளைக் கடந்து எல்லாப் பொருட்களுக்கும் எல்லையாக இருக்கிறது.

மாதொரு பாகன், மங்கை கூறன் ஆதலால் திருமேனி ஒன்று உடையவனல்லன் என்பது நிஜமாகிறது. அவன் எல்லாப் பொருள்களிலும் பரவி உள்ளவன். அவன் மறைக்கும் முதல்வன். விண்ணகத்தாரும், மண்ணகத்தாரும், அளவிறந்த காலமாக எந்தெந்த முறையில் பரவிப் புகழ்ந்தாலும் வரையறுத்து புகழ முடியாத உயிர்த்துணைவன்.அந்தப் பெருமானின் ஊர் யாது? பேர் யாது? உறவினர் யார்? அயலார் யார்? அவரைப் பாடும் தன்மை எப்படி? அன்புடன் கூறுவீர்களா?” என்று நீராட வந்த தோழிகள் கேட்பதாக இப்பாசுரம் அமைந்துள்ளது.

ஆர் கிருஷ்ணமூர்த்தி