தாய்க்குலத்தின் ஆணை

ஓட்டுப்போட்டுவிட்டு மறுவேலை பார்!

  • ஓட்டுப்போடுவது என்பது நமக்காகத்தானே…! நம்ம வீட்டுக் கல்யாணம்மாதிரி, முதல் ஆளா நாமதான் ஓட்டுப்போடணும். குடும்பத்தில் தாத்தா, பாட்டி, அம்மா, நானு என எல்லோரையும் அப்பா ஓட்டுச்சாவடிக்கு கூட்டிக்கிட்டு போவாரு. எங்க குடும்பம்தான் முதல் ஓட்டு போடும்.

– எஸ். சோபனா ஆசிரியை மாணிக்கம்பாளையம்

  • காலையில் விழித்தவுடன் வாசல் தெளித்து கோலம் போட்டு விளக்கேற்றி சாமி கும்பிட்டுவிட்டு ஓட்டுச்சாவடி சென்று வாக்களித்து விடுவேன். பின்னர்தான் அன்றைய பணிகளை துவங்குவேன். நம் வீடுக்கு அருகில் உள்ள அனைவரையும் காலையிலேயே ஓட்டு போடுமாறு கேட்டுக்கொள்வேன்.

-மா. ரஞ்சனா ஆசிரியை திருப்பூர்

  • நம் வீடுகளில் சமையலுக்கு காய்கறி வாங்கும் போது  நல்லதா சொத்தை இல்லாததா பார்த்து பார்த்து வாங்குகிறோம்.அஞ்சு வருஷம்   நம்மைஆளப்  போகிறஅரசாங்கத்தை தேர்ந்தெடுக்க வேட்பாளர்  நல்லவரா நாட்டு  நலனில் அக்கறைஉள்ளவரா என்று பார்த்து வாக்களிக்க   வேண்டும்.

– ஷோபனி மதீஷ் குடும்பத் தலைவி தாம்பரம்

  • ஜனநாயகத்தின் வேர் வாக்குரிமை. வாக்குரிமையை விட்டுத்தருவது குடியுரிமை இழப்பதற்கு ஓப்பானது. என் வாக்கு என் உரிமை. வாக்களிப்பது என் கடமை. காலையிலேயே வாக்களிக்கச் செல்லுங்கள்.

-சித்ரா ஸ்ரீனிவாசன் தனியார் நிறுவன ஊழியர் வேலூர்

  • ‘‘காலையில் சிற்றூண்டி முடித்த கையோடு ஓட்டுப் போட போய்விடுவோம். திரும்ப வந்துதான் மதிய உணவு’’ என்று வீட்டில் எல்லோருக்கும் தெளிவாக சொல்லிவிட்டேன். அன்று முகூர்த்த நாள் தெரிந்தவர் வீட்டு கல்யாணம். மாலை வரவேற்புக்குத்தான் போகப் போகிறோம்.

-சாந்திபிரியா செம்பாக்கம் சமூக ஆர்வலர்

  • நம்ம மகளுக்கு மாப்பிள்ளை பார்க்க எத்தனை குடும்பங்களில்  மாப்பிள்ளை தேடுகிறோம்,  ஜாதக பொருத்தம் பார்க்கிறோம்! அது போல தான் தேர்தலும். ஆட்சி செய்யப் போகிறவர் நல்லவரா கெட்டவரா என்று பார்த்து ஓட்டு போடுவோம்.

-மீனா நேதாஜி இல்லத்தரசி நகரி